என் மலர்
செய்திகள்

சிவகங்கையில் தி.மு.க. சார்பில் ரெயில் மறியல் 1,000 பேர் கைது
சிவகங்கை:
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தி.மு.க.வும் இதற்கு முழு ஆதரவு அளித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் விருதுநகர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கர்நாடக அரசை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.
அப்போது ஏற்கனவே பாதுகாப்புக்கு அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்குள் புகுந்து அங்கே நின்றிருந்த சென்னை-ராமேசுவரம் ரெயிலை மறித்து போராட்டம் செய்தனர். சிலர் ரெயில் என்ஜினில் ஏறி கோஷமிட்டனர்.
இதையடுத்து ரெயில்வே மற்றும் மாவட்ட போலீசார் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தில் மறியல் செய்த தி.மு.க.வினரை அப்புறப்படுத்தினர். மேலும் ரெயில் நிலையம் முன்பு போராட்டம் செய்த பெரியகருப்பன், தென்னவன் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.