என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை
    X

    விருத்தாசலத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை

    விருத்தாசலத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 26). இவர் கடந்த மே மாதம் 15-ந் தேதி விருத்தாசலத்தில் நடந்த கொலை வழக்கில் கைதானார். சிறைக்கு சென்ற அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தினமும் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

    இந்த நிலையில் விக்னேஷ்வரன் இன்று காலை விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட மோட்டார் சைக்கிளில் கிளம்பினார். விருத்தாசலம் தெப்பக்குளம் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் அவர் மீது மோதியது.

    நிலை தடுமாறி கீழே வழுந்த விக்னேஷ்வரனை காரில் இருந்து இறங்கிய 4 பேர் கும்பல் சுற்றிவளைத்து வெட்ட முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பிய விக்னேஷ்வரன் விருத்தாசலம் புதுப்பேட்டை சாலையில் ஓடினார். எதிர்பாராத விதமாக நடுரோட்டில் நிலை தடுமாறி விழுந்தார்.

    உடனே அந்த கும்பல் விக்னேஷ்வரனின் கழுத்து, கை, கால்களில் சரமாரியாக வெட்டியது. பலத்த காயம் அடைந்த விக்னேஷ்வரன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விக்னேஷ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மே மாதம் நடந்த கொலைக்கு பழிவாங்கும் வகையில் விக்னேஷ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    விருத்தாசலத்தில் பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×