என் மலர்
செய்திகள்

கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர்:
கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இங்கு உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 24) சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
மணிகண்டன் இன்று காலை சிறையில் உள்ள கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினான். அதிர்ச்சி அடைந்த கைதிகள் சிறைவார்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மணிகண்டன் கடந்த 2014-ம் ஆண்டு திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த ஞானாம்பாள், சாந்தா, 2015-ம் ஆண்டு கலா ஆகிய 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். இந்தவழக்கு உள்பட மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மணிகண்டன் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மத்திய சிறை வளாகத்தில் சிறைகைதி தூக்குபோட்டு தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மத்திய சிறையில் கடந்த 6 மாதங்களில் 5 கைதிகள் தற்கொலை செய்துள்ளனர்.






