என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையை அடுத்த சேலையூரில் நகராட்சி பள்ளியில் தீவிபத்து: மாணவர்கள் பத்திரமாக மீட்பு
    X

    சென்னையை அடுத்த சேலையூரில் நகராட்சி பள்ளியில் தீவிபத்து: மாணவர்கள் பத்திரமாக மீட்பு

    சேலையூரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த சேலையூரில் தாம்பரம் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10 ஆசிரியைகளும் 250 மாணவ- மாணவிகளும் உள்ளனர். 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் போதிய மாணவ-மாணவிகள் இல்லாததால் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் நகராட்சி துப்புரவு பணிக்கு கொண்டுவரப்பட்ட பிளச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இதில் சுமார் 10 டன்னுக்கு மேல் பிளச்சிங் பவுடர் மூட்டைகளை தாம்பரம் நகராட்சி சுகாதார பிரிவினர் அடுக்கி வைத்து அந்த அறையை பூட்டுப்போட்டு மூடிவைத்தனர்.

    பள்ளி வழக்கம்போல நேற்று காலை தொடங்கி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென பிளச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்து கடுமையான மருந்து நெடியுடன் புகை வந்தது. இதனால் பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் குமட்டல் ஏற்பட்டது.

    பிளச்சிங் பவுடர் தீப்பிடித்ததால் ஏற்பட்ட புகை நாற்றம் அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியதால் பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டனர். உடனடியாக பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அருகில் குளக்கரை பகுதியில் இருந்த கோவில் வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து தாம்பரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். கடுமையாக மருந்து நாற்றம் அடித்ததால் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட முகமூடி அணிந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் தீயணைப்பு வீரர்கள் போராடி புகையை கட்டுப்படுத்தினர். இதன் பின்பு பிளச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைகளின் கதவுகளை உடைத்து, சுவரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து எரிந்த மூட்டைகளை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இந்த விபத்து காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. கல்வித் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளிக்கு உள்ளேயே பிளச்சிங் பவுடர், சுத்தம் செய்யும் திராவகம் போன்ற ஆபத்தான பொருட்களை நகராட்சி சுகாதாரத் துறையினர் அடுக்கி வைத்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் அவை எப்படி இருக்கிறது என்று எந்த அதிகாரியும் ஒரு நாளும் ஆய்வு செய்ததில்லை. பல மாதங்களாக அவை பூட்டிய அறையில் இருந்ததால் வெப்பம் அதிகரித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி முழுவதுமே மருந்து நாற்றம் அடித்ததால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான பொருட் களை பள்ளியில் வைப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றனர்.

    இந்த சம்பவத்தால் சேலையூர் பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    Next Story
    ×