search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. போட்டி சட்டசபை கூட்டம்: சென்னை மாநகராட்சியில் கண்டன தீர்மானம்
    X

    தி.மு.க. போட்டி சட்டசபை கூட்டம்: சென்னை மாநகராட்சியில் கண்டன தீர்மானம்

    தி.மு.க. போட்டி சட்டசபை கூட்டம் நடத்தியதற்கு சென்னை மாநகராட்சியில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை நடந்தது. மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். கமி‌ஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் சைதை துரைசாமி மாநகராட்சியின் சாதனைகள், திட்டங்கள் குறித்து பேசினார்.

    அதன்பிறகு சிறப்பு தீர்மானம் ஒன்றை வாசிக்க தொடங்கினார். அவர் கூறியதாவது:-

    சபாநாயகர் தனபாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் அசிங்கப்படுத்தியும், கேவலப்படுத்தியும் ஒருமையில் அழைத்துள்ளனர். இது சபாநாயகரின் கண்ணியத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இதை நேரடியாகவும், வீடியோ பதிவுகள் மூலமும் பார்த்தவர்கள் அறிவார்கள்.

    முதல்-அமைச்சர் அம்மாவின் ஆட்சியில் நல்ல திட்டங்களால் மக்கள் நன்மை பெறுவதை பொறுக்க முடியாமல் ஆட்சிக்கு எதிராக தி.மு.க.வினர் செயல்பட்டுள்ளனர்.

    கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு ஆற்றிய பணிகளை புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்து எது நல்ல ஆட்சி என்பதையும், தி.மு.க. ஆட்சி எவ்வாறு செயலற்ற அரசாங்கமாக இருந்தது என்பதையும் புள்ளி விவரங்களுடன் முதல்-அமைச்சர் அம்மா சடடமன்றத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.

    இதை பொறுக்க முடியாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள். 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்புகளுக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விதிகளையும், மரபுகளையும் மீறி செயல்படுகிறார்கள்.

    சட்டமன்ற கூட்டத் தொடரில் தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் அவர்கள் மக்கள் பிரச்சினை பற்றி எதுவும் பேசவில்லை. விதிகளுக்கு புறம்பாக தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் பொய் புகார்களை கூறுகிறார்கள்.

    நமக்கு நாமே பயணம் குறித்து சில கருத்துக்களை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது அதை நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை வைத்தார்.

    அதற்கு சபாநாயகர், “அ.தி.மு.க. உறுப்பினர் பொதுவான கருத்தைத்தான் பேசினார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அப்படி யாருடைய பெயரையும் குறிப்பிடாதபோது அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது” என்றார்.

    இதனால் சபாநாயகரின் உருவ பொம்மையை தி.மு.க. வினர் எரிப்பது என்ன நியாயம்? இதை இந்த மாநகராட்சி மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

    அவை மரபுகளை மீறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போட்டி சட்டமன்ற கூட்டம் நடத்துகிறார்கள். இது அவையின் கண்ணியத்தையும் மரபையும் மீறும் செயலாகும்.

    எனவே தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்களை இந்த மாநகராட்சி மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

    சபாநாயகரின் உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்ததற்கு கருணாநிதி மன்னிப்பு கோர வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இனிமேல் சட்டமன்றத்தில் கண்ணியக்குறைவாக நடந்து கொள்ள மாட்டோம் என்று அவர்கள் உறுதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு மேயர் சைதை துரைசாமி கூறினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் போஸ் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அதே போல காங்கிரஸ் கவுன் சிலர் தமிழ்செல்வனும் வெளிநடப்பு செய்தார்.

    வெளிநடப்பு செய்த தி.மு.க. கவுன்சிலர் போஸ் கூறியதாவது:-

    சட்டமன்றத்தில் நடை பெறாத தவறான தகவல்களை இந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பதிவு செய்கிறார். மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச நேரம் தருவதில்லை. அதற்கு அனுமதியும் கொடுப்பதில்லை.

    மேலும் மேயர் சைதை துரைசாமி அந்த தீர்மானத்தை வாசிக்கும் போது இது உங்களுக்கு பிடிக்காத தீர்மானம். வேண்டுமென்றால் வெளிநடப்பு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். எனவே மேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×