என் மலர்
செய்திகள்

விரட்டிய யானையிடமிருந்து தப்பிக்க இறந்தவர் போல் நடித்த விவசாயி
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் வனப்பகுதியை அடுத்த கடம்பூர் காப்புக்காடு குன்றி மலை கிராமத்தை சேர்ந்தவர் தொட்டு சித்தையா (வயது 55) விவசாயி.
இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். மர்ம நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டது. இதனால் வனப்பகுதிக்கு சென்று மூலிகை செடி பறிக்கச் சென்றார்.
மூலிகை செடிகளை பறித்துக் கொண்டு அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு வனக்குட்டையில் தண்ணீர் குடித்து கொண்டு ஒரு யானை எதிரே வந்தது.
யானையிடமிருந்து தப்பிக்க அவர் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அங்கு வந்த அந்த யானை தொட்டு சித்தையாவை துதிக்கையால் தூக்கி வீசியது.
இதில் 10அடி தூரம் போய் விழுந்த அவர் படுகாயத்துடன் துடித்தார்.
அந்த யானை அவரை மீண்டும் தாக்க ஓடி வந்தது. இதை கண்ட அவர் வலியுடன் இறந்தவர் போல் அப்படியே கை-கால் அசைக்காமல் கிடந்தார். அவர் அருகே வந்த அந்த யானை அவரது உடலை காலால் தள்ளி புரட்டிப் பார்த்தது. அவர் அசைவற்று கிடந்ததால் அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.
அந்த யானை வெகு தூரம் சென்ற பிறகு அவர் தனது ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அவரது உறவினர்களும் பொதுமக்களும் ஓடி வந்து படுகாயத்துடன் துடித்த தொட்டு சித்தையாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






