என் மலர்
செய்திகள்

தேர்தல் விதி மீறல் வழக்கு: பண்ருட்டி கோர்ட்டில் திருமாவளவன் ஆஜராகவில்லை
பண்ருட்டி:
கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்போது, பண்ருட்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி, நடிகர் நெப்போலியன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பண்ருட்டி 1–வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 18–ந் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆஜரானார். வழக்கை நீதிபதி சரவணபாபு விசாரித்து விசாரணையை 27–ந் தேதிக்கு(இன்று) ஒத்திவைத்து அன்றைய தினம் திருமாவளவன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால் திருமாவளவன் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் தாமரைசெல்வன் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். அதில் திருமாவளவனுக்கு உடல்நலம் சரியில்லை அதனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.






