என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துநகர் எக்ஸ்பிரஸ் தாமதம்: மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியல்
    X

    முத்துநகர் எக்ஸ்பிரஸ் தாமதம்: மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியல்

    முத்துநகர் எக்ஸ்பிரஸ் தாமதம் ஆனதால் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அவர்கள் தினமும் காலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து முத்துநகர், அனந்தபுரி, ராமேஸ்வரம், விழுப்புரம் பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ், பாண்டிச்சேரி ரெயில்களில் சென்னைக்கு செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக தாமதமாக வரும் ரெயில்களில் அவர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி பயணிகள் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியாக கூறவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் மதுராந்தகம் ரெயில் நிலையத்துக்கு வரவேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வருவதாக ரெயில் நிலையத்தில் அறிவித்தனர். இதனால் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த ரெயில் நிலைய ஊழியர்கள் 7 மணி அளவில் தாமதமாக வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு முன்பே ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் தவித்தனர்.

    பயணிகளின் மறியல் போராட்டம் பற்றி அறிந்ததும் ரெயில் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதையடுத்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் மேலும் சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. பயணிகள் புலம் பியபடி அதே ரெயிலில் ஏறிச் சென்றனர்.

    Next Story
    ×