என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் 11 மாணவர்களுடன் கழிவுநீர் கால்வாயில் கவிழ்ந்த ஆட்டோ - அதிர்ஷ்டவசமாக தப்பினர்
    X

    ஈரோட்டில் 11 மாணவர்களுடன் கழிவுநீர் கால்வாயில் கவிழ்ந்த ஆட்டோ - அதிர்ஷ்டவசமாக தப்பினர்

    ஈரோட்டில் 11 மாணவர்களுடன் சென்ற ஆட்டோ, டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து கால்வாய்க்குள் விழுந்தது. இதில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    ஈரோடு:

    ஈரோடு பி.பி. அக்ர ஹாரம், 16 ரோடு, வீரப்பன்சத்திரம், காவிரி ரோடு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 11 பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ இன்று காலை மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றது.

    இந்த ஆட்டோ மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் இருந்து நேதாஜி நகருக்கு செல்லும் ரோட்டில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஆட்டோ டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து அருகில் இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்தது.

    ஆட்டோவில் இருந்த மாணவர்கள் அலறத் தொடங்கினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆட்டோக்குள் தவித்த 11 மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆட்டோவை நேராக நிமிர்த்தினார்கள். மீட்கப்பட்ட 11 மாணவர்களும் மிகவும் பதட்டத்துடன் இருந்தனர்.

    உடனடியாக மாணவர்கள் மீட்கப்பட்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றிய தகவல் கிடைத்தும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி ரோடு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 40) என்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    நேதாஜி நகர் பகுதியில் காலை நேரங்களில் செல்லும் அனைத்து ஆட்டோக்களிலும் இப்படித்தான் அதிகமான பள்ளிக்கூட மாணவர்களை ஏற்றிச்செல்கிறார்கள். இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. நல்ல வேலையாக இன்று எந்த மாணவர்களுக்கும் காயம் ஏற்படவில்லை.

    இனியாவது இது போன்று நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×