என் மலர்
செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுத்தை புலி நடமாட்டம்
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு காட்டாங் கொளத்தூர் அஞ்சூர் கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுத்தைபுலி நடமாடுவதாக அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு வனசரகர் கோபுவுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வனத்துறையின் சார்பில் காட்டிற்குள் சிறுத்தையை பிடிக்க கூண்டுகளும், நடமாட்டத்தை கண்டுபிடிக்க சி.சி.டி.வி கேமிராவும் பொருத்தப்பட்டன.
பொதுமக்கள் இரவில் வெளியே செல்ல கூடாது. இரவில் வீட்டில் விளக்குகளை எரிய வைக்கவேண்டும் என மக்களிடம் வனசரகர் கூறினார்.
இந்தநிலையில் நேற்றுஇரவு அஞ்சூர் பழைய கிராமம் அரசு மேல் நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள இடத்திற்கு ஒரு சிறுத்தை புலி வந்தது. அதை பார்த்ததும் அங்குள்ள நாய்கள் குரைத்தன. உடனே அப்பகுதி மக்கள் வீட்டில் லைட்டை போட்டு விட்டு வெளியே வந்தனர். அப்போது சிறுத்தை புலி ஒரு நாய்யை அடித்து கொன்று ரத்தம் சொட்ட, சொட்ட வாயில் கவ்விய படி சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து உடனடியாக வன சரகர் கோபுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வன ஊழியர்கள் 6 பேருடன் ஆயுதங்களுடன் சென்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் சிறுத்தை புலியை தேடி வருகிறார்கள்.சிறுத்தைபுலி வந்த இடத்தில் இருந்து சி.சி.டி.வி கேமிரா வெகு தொலைவில் உள்ளதால் அதில் அதன் உருவம் பதிவாகவில்லை.
மேலும் காட்டிற்குள் உள்ள மற்ற சி.சி.டி.வி கேமிராக்களை உழியர்கள் பரிசோதித்து வருகிறார்கள். அஞ்சூரை சுற்றியுள்ள கொண்டமங்களம்,கருநீலம், தென்மேல்பாக்கம், நிலச்சகரை அணை, புன்ன வாக்கம், பட்டரவாக்கம், புலிகுடிவணம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆடு, மாடுகளை, வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டிவைக்கும் படியும் பொது மக்களிடம் கூறினர்.
பழைய அஞ்சூர் கிராமத்திற்கு சிறுத்தை புலி வந்தது நாய்யை இழுத்து சென்றதால் மீண்டும் அங்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் இரவில் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். வீட்டில் விளக்குகளை எரிய வைக்க வேண்டும். இவ்வாறு வன சரகர் கோபு மக்களிடம் கூறி உள்ளார். மேலும் அந்த காட்டில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.






