என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரே நாளில் 260 ஜோடிகளுக்கு திருமணம்
    X

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரே நாளில் 260 ஜோடிகளுக்கு திருமணம்

    கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் இன்று ஒரே நாளில் 260 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் மிகச்சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இங்கு வருபவர்கள் தங்களுக்கு திருமணம் சிறப்பாக கை கூடினால் கோவிலுக்கு வந்து திருமணம் செய்வதாக வேண்டிக் கொள்வார்கள். பின்னர் முகூர்த்த நாளில் கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொள்வார்கள். ஒரே நாளில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும்.

    எனவே திருமணம் நடப்பதற்காக கோவில் அருகே உள்ள அவசதகிரி மலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருமண மண்டபம் கட்டபட்டுள்ளது.

    அந்த திருமண மண்டபத்தில் முகூர்த்த நாளில் திருமணங்கள் நடைபெறும். இன்று வைகாசி மாதம் கடைசி முகூர்த்தமாகும். இதையொட்டி கடலூர், விழுப்புரம், புதுவை ஆகிய பகுதிகளில் இருந்து திருமணம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் கார், வேன்களில் திருவந்திபுரம் வந்தனர்.

    கோவில் அருகே கடலூர்-பாலூர் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினார்கள். அங்கிருந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து கோவிலுக்கு வந்தனர். கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமண மண்டபத்தின் மேல்பகுதியிலும், கீழ் பகுதியிலும் திருமணங்கள் நடைபெற்றன.

    அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை 70 ஜோடிகளுக்கும் 7.30 மணியில் இருந்து 9 மணி வரை 70 ஜோடிகளுக்கும், 9 மணி முதல் 10.30 மணி வரை 70 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

    மேலும் கோவில் அருகே உள்ள மற்ற திருமண மண்டபங்களில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அதாவது இன்று ஒரே நாளில் 260 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்தபின் மணமக்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். இதனால் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடலூர்-பாலூர் சாலையில் வாகனங்கள் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் பில்லாலி தொட்டி கிராமத்தில் இருந்து கடலூர் கே.என்.பேட்டை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோட்டின் இரு புறமும் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்த போக்குவரத்தை சீர்செய்தனர்.

    திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் திருமணம் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு தை மாதம் 222 ஜோடிகளுக்கும், 2013-ம் தை மாதம் 300 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இன்று வைகாசி முகூர்த்த நாளையொட்டி 260 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    Next Story
    ×