search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் நாளை 200 இடங்களில் முகாம்-  மழைக்கால நோய்களுக்கு இலவச சிகிச்சை
    X

    சென்னையில் நாளை 200 இடங்களில் முகாம்- மழைக்கால நோய்களுக்கு இலவச சிகிச்சை

    • தற்போது சென்னையில் மழைக்கால நோயான ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள், நர்சுகள், உதவியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள்.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறையும், மாநகராட்சியும் இணைந்து நாளை (சனிக்கிழமை) மருத்துவ முகாம்கள் நடத்தும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    அதன்படி நாளை ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவ முகாம் வீதம் 200 வார்டுகளிலும் 200 இடங்களில் முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள், நர்சுகள், உதவியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள்.

    இதற்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்தும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்களுடன் இணைந்து முகாம்களில் பணியாற்றுகிறார்கள்.

    200 வார்டுகளிலும் எந்தெந்த இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்ற விபரம் அனைத்து மண்டல அலுவலகங்களிலும், வார்டு அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது சென்னையில் மழைக்கால நோயான 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவி வருகிறது. மருத்துவ முகாம்களில் கண்வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, சேற்றுப்புண் உள்ளிட்ட வியாதிகள் தொடர்பாக பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படும்.

    மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவார்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நில வேம்பு குடிநீரும் வழங்கப்படும். உப்பு-சர்க்கரை கரைசலும் வழங்கப்படும்.

    பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×