search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊத்தங்கரையில் பஸ்சுக்கு தீ வைத்த 2 பேர் கைது
    X

    ஊத்தங்கரையில் பஸ்சுக்கு தீ வைத்த 2 பேர் கைது

    • தனியார் பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திய பள்ளி பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் சலாம். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மகன் சதாம் உசேன் (33). இவர் ஊத்தங்கரையில் திருப்பத்தூர் சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கம்பனி நடத்தி வந்தார்.

    கடந்த 19-ந் தேதி இரவு இவர் 7.30 மணி அளவில் கம்பெனியை பூட்டி விட்டு திருப்பத்தூர்-ஊத்தங்கரை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில், மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக தனியார் பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சதாம்உசேன் பலியானார். அதேபோல அருகில் இருந்த மோட்டார் சைக்கிள்கள், மின்கம்பம் மீது பஸ் மோதியதில் அவை சேதமடைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் அங்கு சென்று சதாம் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய பள்ளி பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பஸ்சுக்கு மர்ம நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் தீ வைத்தனர். இதில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசம் ஆனது.

    இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் பஸ்சை எரித்த வழக்கில் ஊத்தங்கரை அவ்வை நகர் மேற்கு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (33), சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வேடப்பட்டியை சேர்ந்த சூர்யா (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் மணிவண்ணன் பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராக உள்ளார். விபத்தில் இறந்த சதாம்உசேன் இவர்களின் நண்பர்கள் ஆவார்கள். விபத்தில் இவர்களின் நண்பர் இறந்ததால் ஆத்திரத்தில் பஸ்சை எரித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×