என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொன்னேரியில் தாயால் விஷம் கொடுக்கப்பட்ட 11 மாத குழந்தை பலி
- நவீன்குமார்-சிவசங்கர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- மனவேதனை அடைந்த சிவசங்கரி விஷம் குடித்தார். மேலும் விஷத்தை தனது 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்துவிட்டு மயக்கம் அடைந்தார்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மனைவி சிவசங்கரி (வயது24). இவர்களது 11 மாத குழந்தை சர்வீன்குமார்.
நவீன்குமார்-சிவசங்கர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 21-ந்தேதி நவீன் குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதில் மனவேதனை அடைந்த சிவசங்கரி விஷம் குடித்தார். மேலும் விஷத்தை தனது 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்துவிட்டு மயக்கம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் தாயையும், குழந்தையையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கடந்த 25-ந்தேதி மாலை சிகிச்சை பலனின்றி சிவசங்கரி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்து இருந்தனர்.
இதற்கிடையே சிவசங்கரியின் உடலை வீட்டுக்கு கொண்டுவருவதற்குள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சர்வீன் குமாரும் பரிதாபமாக இறந்தான்.
இதைத்தொடர்ந்து தாய்-மகன் இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டது. இச்சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






