என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமேசுவரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை
- ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் ஒரு அறக்கட்டளை சார்பில் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இலங்கையை நோக்கி ஆஞ்சநேயர் பார்ப்பது போன்று இந்த சிலை கட்டப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்:
ராமாயணத்தோடு நெருங்கிய தொடர்புடைய தலம்தான் ராமேசுவரம் ராமநாதசாமி திருக்கோவில் ஆகும். காசிக்கு நிகரான புண்ணிய தலமாகவும் விளங்குகிறது.
இந்தநிலையில் ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் ஒரு அறக்கட்டளை சார்பில் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமி பூஜையுடன் தொடங்கியது. தற்போது அஸ்திவார பணி முடிவடைந்து விட்டது. உப்பு காற்றால் சிலை கட்டிட பணிகள் பாதிக்கப்படாத வகையில் ரசாயனம் கலந்த சிமெண்டு கலவை மூலமும், அதற்கு ஏற்ற கற்கள் பயன்படுத்தியும் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி நடந்து வருகிறது.
இலங்கையை நோக்கி ஆஞ்சநேயர் பார்ப்பது போன்று இந்த சிலை கட்டப்பட்டு வருகிறது. தற்போது 16 அடி உயரத்தில் அஸ்திவார பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. இன்னும் 6 மாதத்திற்குள் மற்ற பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டு வரும் இடத்தின் அருகில் சிவ ஆன்மிக அடியார்கள் திருக்கூட்டம் சார்பில் 51 அடி உயரத்தில் நடராஜர் சிலை கட்டும் பணி நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.






