என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி முன்னிலை
    X

    உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி முன்னிலை

    • தமிழகத்தின் குகேஷ் 8½ புள்ளிகளுடன் 26-வது இடத்தை பெற்றார்.
    • பெண்கள் உலகக் கோப்பையை வென்றவரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 35-வது இடத்தில் இருக்கிறார்.

    உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ரேபிட் வடிவிலான போட்டி நடந்தது. ஓபன் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

    அடுத்ததாக அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய உலக பிளிட்ஸ் போட்டி அதே இடத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவு 19 சுற்றுகளையும், பெண்கள் பிரிவு 15 சுற்றுகளையும் கொண்டது. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 3 நிமிடம் ஒதுக்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்வுக்கும் 2 வினாடி வீதம் அதிகரிக்கப்படும்.

    ஓபன் பிரிவில் 252 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று 13 சுற்றுகள் நடந்தன. இதன் முடிவில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 10 புள்ளிகளுடன் (8 வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா) முன்னிலை வகிக்கிறார். இதில் 9-வது ரவுண்டில் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனை 45-வது நகர்த்தலில் வீழ்த்தியதும் அடங்கும். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் தோற்றதும் விரக்தியில் மேஜையில் கையால் குத்தி விட்டு நடையை கட்டினார்.

    பிரான்சின் மேக்சிம் வச்சியர், அமெரிக்காவின் பேபியானா காருனா ஆகியோரும் தலா 10 புள்ளிகளுடன் எரிகைசியுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். கார்ல்சென் 9 புள்ளியுடன் 11-வது இடத்தில் இருக்கிறார். இந்தியாவின் பிரனேஷ், பிரக்ஞானந்தா, கவுதம் கிருஷ்ணா, ராவ்னக் சத்வானி, நாராயணன் சுனில்தத் உள்ளிட்டோரும் 9 புள்ளிகளுடன் உள்ளனர்.

    கிளாசிக்கல் உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 8½ புள்ளிகளுடன் (8 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வி) 26-வது இடத்தை பெற்றார்.

    இந்த போட்டியில் எஞ்சிய 6 சுற்று ஆட்டகள் இன்று தொடர்ந்து நடக்கின்றன. அதன் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியும் இன்றே நடக்கும்.

    பெண்கள் பிரிவில் 140 வீராங்கனைகள் களம் கண்டுள்ளனர். இதில் முதல் 10 ரவுண்ட் முடிவில் நெதர்லாந்தின் எலின் ரோபர்ஸ் 8½ புள்ளிகளுடன் (7 வெற்றி, 3 டிரா) முன்னிலை வகிக்கிறார். ரேபிட்டில் வாகை சூடிய ரஷியாவின் கோர்யாச்கினா, உஸ்பெகிஸ்தானின் உமிதா ஒமோனோவா, பல்கேரியாவின் ஸ்டெபனோவா ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் அடுத்த நிலையில் உள்ளனர்.

    பெண்கள் உலகக் கோப்பையை வென்றவரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 6 புள்ளிகளுடன் 35-வது இடத்தில் இருக்கிறார். மற்ற இந்தியர்கள் வைஷாலி, ஹரிகா தலா 5½ புள்ளிகளுடனும், கோனெரு ஹம்பி 5 புள்ளிகளுடனும் பின்தங்கியுள்ளனர். மீதமுள்ள 5 சுற்று ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

    Next Story
    ×