என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
    X

    முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

    • இந்திய தரப்பில் லட்சுமி பிரபா- தியா ரமேஷ், ஸ்ரீவள்ளி- அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா- ருதுராஜா போசேல், வைஷ்ணவி அத்கர்- மாயா ரேவதி ஆகிய ஜோடிகள் களம் காணுகின்றன.
    • போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2.41 கோடியாகும்

    சென்னை:

    தமிழக அரசின் ஆதரவுடன் 2-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி நவம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. 3 ஆண்டுக்கு பிறகு நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் உலக தரவரிசையில் 69-வது இடம் வகிக்கும் ஜய்னப் சோன்மெஸ் (துருக்கி), 74-ம் நிலை வீராங்கனை பிரான்செஸ்கா ஜோன்ஸ் (இங்கிலாந்து), ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச் (குரோஷியா), நடப்பு சாம்பியனான லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), லுசியா பிரான்செட்டி (இத்தாலி), ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர இந்திய இளம் நட்சத்திரங்கள் மாயா ரேவதி, ஸ்ரீவள்ளி பாமிதிபதி, சஹஜா யாமலபள்ளி ஆகியோருக்கு நேரடியாக பிரதான சுற்றில் ஆடும் வகையில் 'ைவல்டு கார்டு' சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவையைச் சேர்ந்த 16 வயதான மாயா, முதல் ரவுண்டில் ஸ்ரீவள்ளியுடன் மோத உள்ளார்.

    நேற்று நடந்த தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் 2-6, 3-6 என்ற நேர் செட்டில் பிரான்சின் ஆஸ்ட்ரிட் லியான் பூனுடன் தோல்வி அடைந்தார். ஆனாலும் வைஷ்ணவி அத்கருக்கு பிரதான சுற்றில் விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அதாவது நெருக்கடியான போட்டி அட்டவணை காரணமாக நியூசிலாந்தின் லுலு சன் கடைசி நேரத்தில் விலகி விட்டார். அவருக்கு பதிலாக அந்த இடத்தில் வைஷ்ணவி அத்கர் ஆடுகிறார். அவர் முதல் சுற்றில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச்சுடன் இன்று மல்லுகட்டுகிறார்.

    நடப்பு சாம்பியனான புருவிர்தோவா தனது சவாலை தகுதி நிலை வீராங்கனை பிரான்சின் ஆஸ்ட்ரிட் லியான் பூனுடன் தொடங்குகிறார்.

    இரட்டையர் பிரிவில் மோனிகா நிகல்சுகு (ருமேனியா)- ஸ்டோம் ஹன்டர் (ஆஸ்திரேலியா) ஜோடிக்கு போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக கால்இறுதியில் கால்பதிக்கும் அவர்களுக்கே பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகமாக தெரிகிறது.

    இந்திய தரப்பில் லட்சுமி பிரபா- தியா ரமேஷ், ஸ்ரீவள்ளி- அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா- ருதுராஜா போசேல், வைஷ்ணவி அத்கர்- மாயா ரேவதி ஆகிய ஜோடிகள் களம் காணுகின்றன.

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2.41 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.32 லட்சம் பரிசுத்தொகையுடன் 250 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி ரூ.11½ லட்சம் பரிசாக பெறுவார்கள்.

    முதல் நாள் ஆட்டங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை டி.டி ஸ்போர்ட்ஸ், யூரோ ஸ்போர்ட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×