search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகல்
    X

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகல்

    • இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து 41 வயதான மேரி கோம் நேற்று விலகி இருக்கிறார்.
    • மேரி கோமின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்று 6 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் செயல்படுவார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து 41 வயதான மேரி கோம் நேற்று விலகி இருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'நாட்டுக்கான வேலை செய்வதை எல்லா வகையிலும் நான் பெருமையாக கருதுகிறேன். அதற்காக நான் மனதளவில் தயாராக இருந்தேன். இந்த கவுரவமிக்க பொறுப்பில் என்னால் இருக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது.

    தனிப்பட்ட காரணத்துக்காக இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இந்த பொறுப்பில் இருந்து ஒதுங்குவது எனக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனால் இதனை தவிர எனக்கு வேறு வழியில்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது நாட்டு வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேரி கோம் விலகலை உறுதிப்படுத்தி இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, 'தனிப்பட்ட காரணத்துக்காக இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகியது வருத்தம் அளிக்கிறது. மேரி கோமின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக இருப்போம். அவருக்கு பதிலாக அந்த பொறுப்பில் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்போம்' என்றார்.

    Next Story
    ×