என் மலர்
விளையாட்டு

புரோ கபடி லீக்: எலிமினேட்டர் 1 சுற்றுக்கு முன்னேறியது பாட்னா, ஜெய்ப்பூர்
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பித்தன.
இன்று நடந்த முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின.
இறுதியில் ஜெய்ப்பூர் அணி 30-27 என்ற புள்ளிக் கணக்கில் வென்று எலிமினேட்டர் 1 சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும், யு மும்பா அணியும் மோதின. ஆரம்பம் முதலே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளைக் குவித்தது.
இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 40-31 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி எலிமினேட்டர் 1 சுற்றுக்கு முன்னேறியது. மும்பையிடம் லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு பாட்னா இன்று பழிதீர்த்துக் கொண்டது.
தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் 1 சுற்றில் ஜெய்ப்பூர், பாட்னா அணிகள் மோதுகின்றன.






