என் மலர்
கால்பந்து

பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா-வியட்நாம் அணிகள் இன்று மோதல்
- இந்த போட்டியில் இந்திய அணி கடினமான 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது.
- வியட்நாம், முன்னாள் சாம்பியன்களான சீன தைபே. ஜப்பான் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
பெர்த்:
21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி, பெர்த், கோல்டுகோஸ்ட் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா, ஜப்பான், இந்தியா உள்பட 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடம் பிடிக்கும் இரண்டு சிறந்த அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். அரைஇறுதிக்குள் நுழையும் அணிகள் 2027-ம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்த போட்டியில் இந்திய அணி கடினமான 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. வியட்நாம், முன்னாள் சாம்பியன்களான சீன தைபே. ஜப்பான் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
இதில் பெர்த்தில் இன்று (புதன்கிழமை) இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சுவீட்டி தேவி நங்பம் தலைமையிலான இந்திய அணி, தரவரிசையில் 36-வது இடத்தில் உள்ள வியட்நாமை எதிர்கொள்கிறது. உலக தரவரிசையில் 67-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை.
சமீபத்தில் துருக்கி மற்றும் ஆஸ்திரேலிய கிளப் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் ஆடி தங்களை தயார்படுத்தியது.
வியட்நாம் வளர்ந்து வரும் ஒரு அணியாக விளங்குகிறது. இதற்கு முன்பு இந்த போட்டி தொடரில் லீக் சுற்றில் 2 முறை இந்தியாவை வீழ்த்தி இருக்கும் வியட்நாம் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இரு அணிகளும் போட்டியை வெற்றியுடன் தொடங்க மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இதற்கிடையே இந்த போட்டிக்கான இந்திய அணியினருக்கு வழங்கப்பட்ட சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் சரியானதாக இல்லை என்று வீராங்கனைகள் புகார் தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.






