என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 'ஏ' அணி எளிதாக வெற்றி
- முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 'ஏ' 132 ரன்னில் சுருண்டது.
- இந்தியா 'ஏ' தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கிடையில் அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 'ஏ' அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் 2-வது போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 'ஏ' 132 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீரர் ரிவால்டோ மூன்சாமி அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்தார். இந்தியா 'ஏ' அணி சார்பில் நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 'ஏ' அணி களம் இறங்கியது. அபிஷேக் சர்மா 22 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் அடிக்க இந்தியா 'ஏ' 27.5 ஓவரிலேயே 135 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.






