என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்துக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? 4-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
    X

    இங்கிலாந்துக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? 4-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

    • இந்த டெஸ்டிலும் இந்தியா தோற்றால் தொடரை இழந்து விடும்.
    • இதுவரை நடந்த 139 டெஸ்டில் இந்தியா 36-ல், இங்கிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டி டிரா ஆனது.

    மான்செஸ்டர்:

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 1-2 என்றகணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட் சில் நடந்த 3-வது போட்டியில் 22 ரன்னிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமல் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.

    லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றிக்கு அருகே வந்து தோற்றது ஏமாற்றத்தை அளித்தது. இதற்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த டெஸ்டிலும் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. ஓல்ட் டிராபோர்டில் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இதனால் கடுமையான சவால் காத்திருக்கிறது.

    வீரர்களின் காயத்தால் இந்திய அணி தத்தளிக்கிறது. முழங்கால் காயம் காரணமாக நிதிஷ்குமார் ரெட்டி எஞ்சிய 2 போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதுவரை வாய்ப்பு கிடைக்காத அர்ஷ்தீப் சிங்கும் நாளைய டெஸ்டில் ஆடவில்லை. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ஆகாஷ் தீப்பும் ஆடுவது சந்தேகமே.

    இதனால் 24 வயதான அன்ஜுல் கம்போஜ் அணியோடு இணைந்துள்ளார். அவர் டெஸ்டில் அறிமுகமாகும் நிலை உள்ளது.

    முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது. ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் வாய்ப்பில் இருக்கிறார்கள்.

    தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் முதல் டெஸ்டில் மொத்தம் 34 ரன்களே எடுத்தார்.

    முன்னணி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பதால் விளையாடுவார். ஆனால் அவர் விக்கெட் கீப்பிங் செய்வாரா? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறலாம் என்று கருதப்படுகிறது.

    மிகவும் முக்கியமான இந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். மிகப்பெரிய ஸ்கோரை குவித்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு சவால் கொடுக்க முடியும்.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது.

    11 பேர் கொண்ட அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீருக்கு பதிலாக லியம் டாசன் இடம்பெற்று உள்ளார். அவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் விளையாடுகிறார்.

    இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி சோனி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 140-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 139 டெஸ்டில் இந்தியா 36-ல், இங்கிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டி டிரா ஆனது.

    மான்செஸ்டரில் 9 டெஸ்டில் ஆடி இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. 4-ல் தோற்றது. 5 டெஸ்ட் டிரா ஆனது.

    Next Story
    ×