என் மலர்
விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்- லக்ஷயா சென், சிந்து பங்கேற்பு
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி விளையாடுகிறது.
- கலப்பு அணிகள் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டோ ஜோடிகள் விளையாடுகிறது.
பாரீஸ்:
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 21-வது இடம் வகிக்கும் லக்ஷயா சென், எச்.எஸ். பிரனாய், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரும், 2019-ம் ஆண்டு உலக சாம்பியனுமான பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் களம் இறங்குகிறார்கள். ஆனால் இவர்கள் தொடக்க சுற்றுகளை தாண்டுவதே சிக்கல் தான். அந்த அளவுக்கு போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது.
2021-ம் ஆண்டு உலக பேட்மிண்டனில் வெண்கலம் வென்றவரான லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் 'நம்பர் ஒன்' வீரரான சீனாவின் ஷி யூ கியுடன் கோதாவில் குதிக்கிறார். அவருக்கு எதிராக இதுவரை 4 முறை மோதியிருக்கும் லக்ஷயா சென் அதில் ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளார். பிரனாய் தனது முதல் சுற்றில் பின்லாந்தின் ஜோகிம் ஓல்டோர்ப்பை எதிர்கொள்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றில் 2-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டோன்சனுடன் மோத வேண்டி இருக்கும்.
கடந்த 2 ஆண்டுகளாக பார்மின்றி தடுமாறும் சிந்து, கலோயானா நல்பந்தோவாவுடன் (பல்கேரியா) தனது சவாலை தொடங்குகிறார். இந்திய ஓபனில் கால்இறுதிவரை முன்னேறியதே இந்த சீசனில் அவரது சிறந்த செயல்பாடாக இருப்பது கவனிக்கத்தக்கது. பெண்கள் ஒற்றையரில் ஒலிம்பிக் சாம்பியனான அன்சே யங் (தென்கொரியா), சீனாவின் வாங் ஷி யி, சென் யூ பே ஜப்பானின் அகானே யமாகுச்சி ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் இணையான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு அணிகள் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டோ ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகிறது.






