என் மலர்
விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன்: காலிறுதிக்கு நுழைந்த இந்தியா ஆடவர், மகளிர் அணிகள்
6-வது ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 ஆண்கள் அணிகளும், 11 பெண்கள் அணிகளும் தலா 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
இதில் பெண்களுக்கான 'ஒய்' பிரிவில் இடம் பெற்ற நடப்பு சாம்பியன் இந் திய அணி நேற்று நடந்த தனது 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பெற்ற தாய்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் போராடி வீழ்ந்தது.
ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா 21-14, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் 16-ம் நிலை வீராங்கனை பூசனன் ஓங்பாம்ருங்பானை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜாலி இணை வெற்றி பெற்றது. முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியினர் வெற்றி பெற்று முன்னிலை பெற்றாலும், அதன் பிறகு தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்தனர்.
அதாவது ரஷிதா ராம்ராஜ், தனிஷா கிரஸ்டா-சுருதி மிஸ்ரா, மாள்விகா பான்சோத் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வரிசையாக தோற்ற னர். லீக் முடிவில் தொடர்ந்து 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற தாய்லாந்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தும், முதலாவது ஆட்டத்தில் மியான்மரை 5-0 என்ற கணக்கில் வென்று இருந்த இந்திய அணி (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடம் பெற்றும் கால்இறுதிக்கு முன்னேறின. கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட மியான்மர் வெளியேறியது.
இதேபோல் ஆண்களில் 'சி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் பணிந்தது. இந்திய அணியில் ஆயுஷ் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். எச்.எஸ்.பிரனாய், ஹரிகரன் அம்சகருணன்- பிருத்வி கிருஷ்ணமூர்த்தி. தருண் மன்னேபள்ளி ஆகியோர் தோல்வி கண்டனர். லீக் முடிவில் ஜப் பான் (2 வெற்றி) முதலிடமும், இந்தியா (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து கால்இறுதிக்குள் நுழைந்தன. சிங்கப்பூர் (2 தோல்வி) கால்இறுதி வாய்ப்பை இழந்தது.






