search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 7 தமிழக வீரர், வீராங்கனைகள் தேர்வு
    X

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 7 தமிழக வீரர், வீராங்கனைகள் தேர்வு

    • நீரஜ் சோப்ராவும், அவினாஷ் சாப்லேயும் உலக தடகளப் போட்டிக்காக பயிற்சி பெற்று வருவதால் இதில் பங்கேற்கவில்லை.
    • பி.டி.உஷாவின் சாதனையை ஒடிசாவில் நடந்த போட்டியில் தமிழக வீராங்கனை நித்யா நெருங்கினார்.

    சென்னை:

    24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஜூலை 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டிக்கான 54 (28 ஆண்கள், 26 பெண்கள்) பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. நீரஜ் சோப்ராவும், அவினாஷ் சாப்லேயும் உலக தடகளப் போட்டிக்காக பயிற்சி பெற்று வருவதால் இதில் பங்கேற்கவில்லை.

    ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டில் இருந்து 7 வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் விவரம்:-

    1.ராஜேஷ் (400 மீட்டர் ஓட்டம், 4x400 மீட்டர் தொடர் ஓட்டம், மற்றும் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்).

    2.சந்தோஷ் குமார் (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்).

    3. ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்).

    4. பிரவீன் (டிரிபிள் ஜம்ப்).

    5. நித்யா (100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்).

    6. பரணிகா (போல் வால்ட்).

    7. சுபா (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்).

    ஒடிசாவில் சமீபத்தில் நடந்த தேசிய சீனியர் தடகள போட்டியின் சிறப்பான செயல்பாடு காரணமாக இவர்கள் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழக வீரர், வீராங்கனைகள் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்று தமிழ்நாடு தடகள சுங்க செயலாளர் சி.லதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒடிசாவில் சமீபத்தில் நடந்த தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணி 9 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 17 பதக்கம் பெற்றது. தமிழக வீரர், வீராங்கனைகளின் சிறப்பான செயல்பாடாகும். இதன் அடிப்படையில் தாய்லாந்தில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தனிநபர் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் எல்லோரும் பதக்கம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    தமிழக வீரர், வீராங்கனைகள் தேசிய அளவில் பதக்கம் பெற்றதை தாண்டி தற்போது சர்வதேச அளவிலும் இந்தியாவுக்காக தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற ஆரம்பித்து விட்டனர். சீனியர் போட்டியிலும் அது தொடருகிறது.

    அக்டோபரில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தமிழகத்தை சேர்ந்த அதிகமானோர் தேர்வாகி பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பி.டி.உஷாவின் சாதனையை ஒடிசாவில் நடந்த போட்டியில் தமிழக வீராங்கனை நித்யா நெருங்கினார். பி.டி.உஷாவின் சாதனையை விரைவில் நித்யா முறியடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா கூறி உள்ளார்.

    Next Story
    ×