search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    துவண்டு கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சி அளித்த வெஸ்ட் இண்டீஸ்

    பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நிலையில், இங்கிலாந்தும் ஆண்கள், பெண்கள் அணிகள் பாகிஸ்தானில் விளையாடாது எனத் தெரிவித்தது.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது.

    நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு சற்று முன் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அறிவித்தது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடும் முடிவை திரும்பப் பெற்றது.

    டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. இரண்டு முக்கிய அணிகள் விலகிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எங்களுடைய கமிட்மென்ட்-க்கு நாங்கள் மதிப்பளிக்க திட்டமிட்டுள்ளோம் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ் தெரிவித்துள்ளார்.

    மேலும், பாகிஸ்தான் தொடரை குறித்து ஜானி கிரேவ் கூறுகையில் ‘‘கிரிக்கெட் தொடர் குறித்த எங்களுடைய கடமைகளுக்கு மதிப்பு அளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கும் தொடரையும் சேர்த்துதான்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிர்வாகக்குழு கிரிக்கெட் தொடருக்கான கடமையை நிறைவேற்றாமல் இருப்பது என்பது எங்களுடைய நோக்கமில்லை. எங்களுடைய சுற்றுப்பயண கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். 2018-ம் ஆண்டு நாங்கள் செய்ததை போன்று தனி பாதுகாப்பு நிபுணர்களுடன் செல்வோம்.’’ என்றார்.

    இதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன் கிறிஸ் கெய்ல் பாகிஸ்தானுக்கு செல்ல இருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×