search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஆட்டத்தில் களம் இறங்க உள்ள முன்னணி வீரர்கள் ஷாருக்கான் (கோவை), விஜய் சங்கர் (சேலம்).
    X
    முதல் ஆட்டத்தில் களம் இறங்க உள்ள முன்னணி வீரர்கள் ஷாருக்கான் (கோவை), விஜய் சங்கர் (சேலம்).

    டிஎன்பிஎல் கிரிக்கெட் சென்னையில் இன்று தொடக்கம் - முதல் ஆட்டத்தில் கோவை-சேலம் அணிகள் மோதல்

    இங்கிலாந்து தொடரில் ஆடும் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்), வாஷிங்டன் சுந்தர் (சேலம்) ஆகியோர் இந்த சீசனுக்கான டி.என்.பி.எல். போட்டியில் விளையாட வாய்ப்பில்லை.
    சென்னை:

    சென்னையில் இன்று தொடங்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் கோவை-சேலம் அணிகள் மோதுகின்றன.

    தமிழ்நாட்டில் கிராம அளவிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களின் திறமையை அடையாளம் கண்டு வெளிக்கொணரும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை நடந்துள்ள 4 தொடர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறையும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ் தலா ஒரு முறையும் பட்டம் வென்றன. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 5-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. வழக்கமாக 3-4 இடங்களில் இந்த போட்டி நடத்தப்படுவது உண்டு. ஆனால் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறை மற்றும் மின்னொளி வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஒரே மைதானத்தி லேயே போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த சீசனில் சில அணிகளின் பெயர் மாற்றம், புதிய கேப்டன்கள், புதிய பயிற்சியாளர் என்று அதிரடி மாற்றங்கள் ெசய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முந்தைய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இப்போது சேலம் ஸ்பார்டன்ஸ் என்ற பெயரில் நுழைகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இங்கிலாந்து தொடரில் ஆடும் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்), வாஷிங்டன் சுந்தர் (சேலம்) ஆகியோர் இந்த சீசனுக்கான டி.என்.பி.எல். போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் (திருப்பூர்), தனிப்பட்ட காரணங்களுக்காக முரளிவிஜய் (திருச்சி), இங்கிலாந்து தொடரில் வர்ணனையாளராக பணியாற்றும் தினேஷ் கார்த்திக் (திருப்பூர்) ஆகியோர் விலகியுள்ளனர். இதே போல் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் அங்கம் வகிக்கும் வருண் சக்ரவர்த்தி (மதுரை), சாய் கிஷோர், சந்தீப் வாரியர்ஸ் (இருவரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) ஆகியோர் அந்த தொடர் முடிந்ததும் டி.என்.பி.எல். போட்டியில் இணைந்து கொள்வார்கள்.

    ஒரு பக்கம் முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் இன்னொரு புறம் இந்திய அணிக்காக ஆடிய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (சேலம்), ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் கலக்கிய ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் (கோவை கிங்ஸ்) மற்றும் விக்கெட் கீப்பர் ஜெகதீசன், கவுசிக் காந்தி (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), அருண் கார்த்திக் (மதுரை), முருகன் அஸ்வின், ஜி.பெரியசாமி (இருவரும் சேலம்), பாபா சகோதரர்களான அபராஜித், இந்திரஜித் மற்றும் அதிசயராஜ் டேவிட்சன்(3 பேரும் நெல்லை), ஹரி நிஷாந்த் (திண்டுக்கல்) உள்ளிட்டோரின் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கொரோனா முன்ெனச்சரிக்கை எதிரொலியாக ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

    முதல் நாளான இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்சை சந்திக்கிறது. இதையொட்டி கடந்த 10 நாட்களாக தீவிர பயிற்சி மேற்கொண்ட இவ்விரு அணி வீரர்களும் வெற்றியுடன் போட்டியை தொடங்கும் முனைப்பில் உள்ளனர்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    Next Story
    ×