search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீரர் ஸ்ரீகாந்த்
    X
    இந்திய வீரர் ஸ்ரீகாந்த்

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - ஸ்ரீகாந்த் மீண்டும் சாதிப்பாரா?

    மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் இன்று முதல் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    ஒடென்ஸ்:

    மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த மார்ச் 15-ந் தேதிக்கு பிறகு நடைபெறும் முதலாவது சர்வதேச பேட்மிண்டன் போட்டியான இது கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறுகிறது. இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து மற்றும் வீரர் காஷ்யப் மற்றும் நம்பர் ஒன் வீரரான கென்டோ மோமோட்டா உள்ளிட்ட ஜப்பான் வீரர்கள் பலரும் கொரோனா அச்சம் காரணமாக விலகி உள்ளனர்.

    இதனால் 2017-ம் ஆண்டு சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் மீண்டும் பட்டம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் டாபி பென்டியை சந்திக்கிறார். முதல் தடையை ஸ்ரீகாந்த் கடந்தால் 2-வது சுற்றில் சக நாட்டு வீரர் சுபாங்கர் தேவ்வை சந்திக்க நேரிடும். அதிலும் முன்னேறினால் கால்இறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீன தைபே வீரர் சோ டின் சென்னுடன் மோத வேண்டியது வரும். மற்றொரு இந்திய வீரரான அஜய் ஜெயராம் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஆன்டர் ஆன்டென்சனை எதிர்கொள்கிறார். 19 வயது இந்திய வீரரான லக் ஷயா சென், பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ போபோவை சந்திக்கிறார். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×