என் மலர்
செய்திகள்

மாரியப்பன் தங்கவேலு
மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது -தேர்வுக்குழு பரிந்துரை
தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கும்படி தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகும். அதற்கு அடுத்தபடியாக வீரர்-வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு தகுதியான வீரர்-வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், குத்துச்சண்டை வீரர்கள் அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
இந்த பரிந்துரைகளை தேர்வுக்குழு ஆய்வு செய்து, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது வழங்க தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோரின் பெயர்களையும் தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.
Next Story






