search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது டெஸ்ட் நாளை தொடக்கம்- வெற்றியுடன் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா
    X

    4-வது டெஸ்ட் நாளை தொடக்கம்- வெற்றியுடன் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா

    இங்கிலாந்திற்கு எதிரான சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் நாளை களம் இறங்குகிறது. #ENGvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    5 போட்டிகள் டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. 3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    முதல் 2 டெஸ்டில் மோசமாக இருந்த நமது வீரர்களின் பேட்டிங் கடந்த டெஸ்டில் மிகவும் சிறப்பாக இருந்தது. இதே பேட்டிங் திறமையை 4-வது டெஸ்டிலும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். முடியாத பட்சத்தில் ‘டிரா’ செய்ய முயற்சிக்கும்.

    நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக கேப்டன் கோலி அணியில் மாற்றம் செய்யமாட்டார் என்று கருதப்படுகிறது. பயிற்சியின்போது அஸ்வினுக்கு ஏற்பட்ட காயத்தை பொறுத்து இருக்கிறது.



    விராட் கோலி பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 சதம், 2 அரை சதத்துடன் இந்த டெஸ்ட் தொடரில் 440 ரன் குவித்துள்ளார். சராசரி 73.33 ஆகும். புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளனர். இதேபோல ஹர்த்திக் பாண்டியாவும் கடந்த டெஸ்டில் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். வேகப்பந்து வீச்சில் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ‌ஷமி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. வெற்றி பெற முடியாவிட்டால் அந்த அணி ‘டிரா’ செய்தால் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் இந்த அணி வெற்றி அல்லது டிரா என்ற நோக்கத்தில் களம் இறங்கும்.
    Next Story
    ×