search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்னில் வெற்றி: பும்ராவுக்கு கோலி பாராட்டு
    X

    பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்னில் வெற்றி: பும்ராவுக்கு கோலி பாராட்டு

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு பும்ராவின் அபாரமான பந்துவீச்சே காரணம் என கேப்டன் விராட் கோலி பாராட்டி உள்ளார்.
    நாக்பூர்:

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா 5 ரன்னில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    நாக்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது.

    கடந்த சில போட்டிகளில் மோசமாக ஆடிய ராகுல் நேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். அவர் 47 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), மனிஷ் பாண்டே 26 பந்தில் 30 ரன்னும் எடுத்தனர். ஜோர்டான் 3 விக்கெட்டும், மில்ஸ், மொயின் அலி, ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 5 ரன்னில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 27 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோரூட் 38 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி) எடுத்தனர். ஆசிஷ் நெக்ரா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்தியாவின் இந்த வெற்றிக்கு பும்ராவின் அபாரமான பந்துவீச்சே காரணம். ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 8 ரன்னே தேவைப்பட்டது.

    பும்ரா கடைசி ஓவரை நேர்த்தியாக வீசி 2 ரன்னை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டை எடுத்தார். மேலும் ஆட்டத்தின் 18-வது ஓவரிலும் அவர் 3 ரன்களே கொடுத்தார். அவரது இந்த இரண்டு ஓவர் ஆட்டத்தின் தன்மையை மாற்றி வெற்றிக்கு வழிவகுத்தது. அவர் 4 ஓவர் வீசி 20 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றியதால் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடைசி 5 ஓவரில் இங்கிலாந்துக்கு 40 ரன் தேவை என்ற நிலையில் தான் இந்த வெற்றியை பெற்றோம். நெக்ரா, பும்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தினார்கள். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    கடைசி ஓவரை பும்ரா மிகவும் நேர்த்தியாக வீசினார். அவரது திறமையை பார்த்து தான் கடைசி ஓவரை கொடுத்தேன்.

    நெக்ரா அனுபவம் வாய்ந்தவர். என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும். பும்ரா ஒவ்வொரு பந்துக்கும் என்னிடம் வந்து கலந்து ஆலோசித்தார். அவரது திறமையை நான் ஊக்கப்படுத்தினேன்.

    பந்து சிக்சருக்கு சென்றுவிட்டால் நாளை இதைவிட சிறப்பாக வீசலாம். அதோடு உலகம் முடிந்து விடாது என்று தைரியம் அளித்து அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினேன். அவரும் நேர்த்தியாக வீசி வெற்றி பெற வைத்தார்.

    நம்பிக்கை தான் மிகவும் முக்கியம். அவர் மீது நம்பிக்கை வைத்து தான் கடைசி ஓவரை கொடுத்தேன்.

    இந்த ஆடுகளத்தில் ராகுலின் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர் மட்டுமே சரியான முறையில் திட்டமிட்டு விளையாடினார்.

    தொடரை முடிவு செய்யும் கடைசி ஆட்டம் பெங்களூரில் நடக்கிறது. இது எனது 2-வது தாய் வீடாகும். ஒவ்வொரு வரும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பழிதீர்த்து கொண்டது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பிப்ரவரி 1-ந்தேதி (புதன்கிழமை) பெங்களூரில் நடக்கிறது.
    Next Story
    ×