search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய சீனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக ஆண்கள் அணி
    X

    தேசிய சீனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக ஆண்கள் அணி

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் அரையிறுதியில் தமிழக அணி தோல்வியே சந்திக்காத கேரளாவை எதிர்கொள்கிறது.
    சென்னை:

    65-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் தமிழ்நாடு அணி 25-20, 25-20, 25-21 என்ற நேர் செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. தமிழக அணியில் நவீன் ராஜா ஜேக்கப், ஷெல்டன் மோசஸ், சத்ரியன் ஆகியோரின் ஆட்டம் அபாரமாக இருந்தது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே 25-20, 25-20, 25-13 என்ற நேர் செட்டில் ஆந்திராவையும், பஞ்சாப் அணி 25-22, 25-18, 25-19 என்ற நேர் செட்டில் சர்வீசஸ் அணியையும், கேரள அணி 25-14, 25-11, 25-13 என்ற செட் கணக்கில் இமாச்சலபிரதேசத்தையும் சாய்த்தன.

    இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் அரைஇறுதியில் தமிழக அணி, தோல்வியே சந்திக்காத கேரளாவை எதிர்கொள்கிறது. லீக்கில் கேரளாவிடம் அடைந்த தோல்விக்கு தமிழக அணி பழிதீர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மற்றொரு அரைஇறுதியில் இந்தியன் ரெயில்வே- பஞ்சாப் (மாலை 4 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    பெண்கள் பிரிவின் கால்இறுதியில் தமிழக அணி, மராட்டியத்தை எதிர்கொண்டது. இதில் எதிரணியின் ஆக்ரோஷமான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய தமிழக அணி 19-25, 8-25, 11-21 என்ற நேர் செட்டில் தோல்வியை தழுவியது. மற்ற கால்இறுதி மோதல்களில் இந்தியன் ரெயில்வே 25-13, 25-8, 25-17 என்ற செட் கணக்கில் உத்தரபிரதேசத்தையும், ஆந்திரா 25-23, 25-18, 25-6 என்ற செட் கணக்கில் தெலுங்கானாவையும், கேரளா 25-10, 25-15, 25-17 என்ற செட் கணக்கில் மேற்கு வங்காளத்தையும் தோற்கடித்தது. அரைஇறுதியில் இந்தியன் ரெயில்வே-ஆந்திரா (பகல் 12 மணி), மராட்டியம்-கேரளா (பிற்பகல் 2 மணி) அணிகள் மோதுகின்றன.

    நேற்றைய 8 கால்இறுதி ஆட்டங்களும் ஒரு தரப்பாக நேர் செட்டில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×