என் மலர்
செய்திகள்

அரசு வேலை தேடும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமித் கோஹெல்
ரஞ்சி கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ள குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் 26 வயதான சமித் கோஹெல் விளையாட்டு ஒதுக்கீடு அடிப்படையில் அரசு வேலை தேடுவதாக கூறியுள்ளார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் 359 ரன்கள் சேகரித்து புதிய சாதனை படைத்துள்ள குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் 26 வயதான சமித் கோஹெல் கூறும் போது, ‘இது உலக சாதனை என்பது எனக்கு தெரியாது. முடிந்த வரை நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்பது எனது எண்ணமாக இருந்தது. அவ்வாறு செய்யும்படி பயிற்சியாளர் விஜய் பட்டேல், கேப்டன் பார்த்தீவ் பட்டேல் ஆகியோரும் ஊக்கப்படுத்தினர்.
நீண்ட நேரம் பேட் செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது வாழ்க்கையில் இது மிகச்சிறந்த நாள். எனது மகிழ்ச்சியை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. எனது தந்தை சிறிய அளவில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். அதில் வருமானம் பெரிய அளவில் இல்லை.
இப்போது வரைக்கும் எனது ஒரே கவனம் கிரிக்கெட் மீது மட்டுமே உள்ளது. ஒரு பக்கம் அரசு வேலையும் தேடிக்கொண்டிருக்கிறேன். விளையாட்டு ஒதுக்கீடு அடிப்படையில் வருமான வரித்துறை மற்றும் தேனா வங்கியில் பணி கேட்டு, விண்ணப்பம் செய்துள்ளேன். என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்’ என்றார்.
Next Story