என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரிசு மழையில் சிந்து: 5 கோடி ரூபாய் வழங்குவதாக தெலுங்கானா அரசு அறிவிப்பு
    X

    பரிசு மழையில் சிந்து: 5 கோடி ரூபாய் வழங்குவதாக தெலுங்கானா அரசு அறிவிப்பு

    ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு தெலுங்கானா அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
    பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

    அவ்வகையில், ஆந்திர மாநில அரசு அவருக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதவிர, புதிதாக உருவாகி வரும் தலைநகர் அமராவதியில் 1000 சதுர யார்டு வீட்டு மனையும், குரூப்-1 நிலையில் அரசு பணியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சிந்துவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன், 1000 சதுர யார்டு வீட்டுமனையும் வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. பயிற்சியாளர் கோபிசந்துக்கு ஒரு கோடி ரூபாயும், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சிக்கு ஒரு கோடி ரூபாயும் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிந்து விரும்பினால் அரசு வேலை வழங்கத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறினார். நாளை மறுநாள் ஐதராபாத் வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, மாநில அரசு அறிவித்த புதிய விளையாட்டுக் கொள்கையின் அடிப்படையில், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என செய்தி வெளியானது. ஆனால், தற்போது அமைச்சரவைக் கூட்டத்தில், கூடுதல் பரிசுத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×