search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    காசிக்குப் போகலாம் வாங்க!
    X

    காசிக்குப் போகலாம் வாங்க!

    • மிகச்சிறிய கருவறையில் இரண்டு மூன்று பூசாரிகள் நின்றுகொண்டு ஆரத்தி காட்டுகிறார்கள்.
    • ‘ஜெய் விஸ்வநாத் ஜி’ என்ற பக்தர்களின் கோஷம் காதுகளை நிறைக்கிறது.

    இந்துக்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வர விரும்பும் புண்ணியத் தலங்களுள் முக்கியமானவை, காசியும் ராமேஸ்வரமும். தெற்கே இருக்கும் ராமேஸ்வரமும், வடக்கே இருக்கும் காசியும் புனிதத் தலங்கள் மட்டுமல்லாமல், மோட்சத்துக்கான வழிபாட்டுத் தலங்களாகவும் கருதப்படுகின்றன. இப்போது காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி தமிழகத்திலிருந்து ஆன்மிகவாதிகள், இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் காசிக்குச் சென்று வருகிறார்கள். காசிக்குப் போனால் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன? எத்தனை நாட்களுக்குள் அவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத் திரும்புவது சாத்தியம் என்பவர்களுக்காக இக்கட்டுரை…

    காசி எனப்படும் வாராணசி பாரதத்தின் தொன்மை வாய்ந்த பழைமையான நகரம். வாரணாசி என்ற பெயர் வந்ததற்குப் பின்னணியில் இரண்டு ஆறுகள் இருக்கின்றன. வருணா மற்றும் அஸி என்ற இரு ஆறுகள் சங்கமமாகி கங்கையில் கலப்பதால்தான் இந்த நகரத்துக்கு வாரணாசி என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

    பண்டைய புராணங்களிலும் இலக்கியங்களிலும் காசியின் புனிதத்தைப் பற்றி புகழ்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், காசியில் ஓடிக்கொண்டிருக்கும் புனிதமான, அப்பழுக்கற்ற கங்கை நதி!

    காசியில் கங்கா ஸ்நானம் செய்தால் போதும், நம் பாவங்கள் எல்லாம் தொலைந்துவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதற்குக் கட்டியம் கூறுவதுபோல இங்கு தடையின்றி ஓடிக்கொண்டே இருக்கிறாள் கங்கை. காசிக்குச் செல்பவர்கள் கங்கையில் ஸ்நானம் (கங்கையில் முழுகிக் குளிப்பதை) செய்வதை பிரதானமாகக் கடைப்பிடிக்கிறார்கள். கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரையும், அன்னபூரணியையும், விசாலாட்சியையும் வழிபடுவது வழக்கம்.

    படகுப் பயணம்: காசி நகரின் மையத்தில் கங்கை பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறாள். கங்கை நதியைச் சுற்றியும் சுமார் 84 படித்துறைகள் (அவற்றை `காட்'கள் என்கிறார்கள்!) உள்ளன. தசஸ்வமேத காட், மணிகர்னிகா காட், கேதார் காட், அரிச்சந்திரா காட், லலிதா காட், மானசரோவர் காட், அகல்யாபாய் காட், சேட் சிங் காட், அஸி காட், பஞ்சகங்கா காட், ராஜேந்திர பிரசாத் காட் என்று ஒவ்வொரு படித்துறைக்கும் ஒவ்வொரு பெயர். இதில், தசஸ்வமேத காட், மணிகர்னிகா காட், அரிச்சந்திரா காட் போன்றவை மிகவும் முக்கியமானவை.

    இந்தப் படித்துறைகள் முழுவதையும் படகில் அழைத்துப் போய் சுற்றிக் காட்டுகிறார்கள். இதற்கெனக் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட `காட்'களை மட்டும் பார்த்தால் போதும் என்றால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கிறார்கள். நமது நேரத்தையும், செலவிடும் தன்மையையும் பொருத்து படகை அமர்த்திக் கொள்ளலாம். கங்கையில் படகு சவாரி செய்வது மிகவும் ரம்மியமானது.

    மணிகர்னிகா காட்: மணிகர்னிகா என்பதற்கு காதுகளில் அணியப்பட்ட ஆபரணம் என்று பொருள். சதி தேவியின் (பார்வதி தேவியின் மறுபெயர்!) உடலை சிவபெருமான் தன் இரு கைகளிலும் ஏந்தி ருத்ர தாண்டவம் ஆடியபோது, அவளது காதுகளில் இருந்த ஆபரணம் விழுந்த இடம்இது என்பது ஐதீகம். காதுகளில் அணியப்பட்ட ஆபரணம் விழுந்த இடம் என்பதால் இதற்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. இந்தப் படித்துறையில் நீராடிவிட்டு, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுபவர்களும் உள்ளனர். காசி மாநகரில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இந்த படித்துறைக்கு அருகில்தான் எரியூட்டப்படுகின்றன. நாள்தோறும் சுமார் 200 சடலங்கள் எரிக்கப்படுகிறதாம்.

    நாம் படகில் செல்லும்போதே மணிகர்னிகா காட்டிலும், அரிச்சந்திரா காட்டிலும் (அரிச்சந்திர மகாராஜாவின் பெயரால் இந்தப் படித்துறை அழைக்கப்படுகிறது) சடலங்கள் எரிந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

    கேதார் காட்டில் கௌரி குண்ட் என்ற சிறிய குளம் உள்ளது. இங்கு கேதாரேஸ்வரர் என்ற சிவன் கோயில் இருக்கிறது. இங்கு சென்று வழிபட்டால், 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான கேதார்நாத்தில் வழிபட்ட பலன் கிடைக்குமாம்.

    தசஸ்வமேத காட் என்பது பிரம்மாவுடன் தொடர்புடையது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற யாகத்துக்கு பிரம்மா தன்னுடைய 10 குதிரைகளை அளித்தார் என்பதால் இதற்கு தச (பத்து) – அஸ்வமேத (குதிரைகள்)காட் என்று பெயர்.

    இப்படி… ஒவ்வொரு படித்துறையின் பெயருக்குப் பின்னும் ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது.

    முன்பெல்லாம் கங்கை நதி மாசுபட்டு, குளிக்கவே முடியாத அளவுக்கு கருநிறமாக இருக்கும் என்றும், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில் கங்கையை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், தூய்மையான நீர் சலசலத்து ஓடுகிறது என்றும் காசிக்கு அடிக்கடி வருபவர்கள் சொல்கிறார்கள். அது உண்மைதான் என்பது தூய்மையான கங்கையைப் பார்க்கும்போதே புரிகிறது. கங்கா ஸ்நானம் செய்தபின், அங்கே சிறு காகிதத் தட்டுகளில் வைத்து விற்கப்படும் அகல் விளக்கை வாங்கி தீபமேற்றி நதியில் தவழவிட்டு, கங்கா மாதாவை வணங்குவது வழக்கம். மலர்களுக்கு நடுவே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அகல் விளக்கு, தண்ணீரில் மிதந்து செல்வது கண்கொள்ளாக் காட்சி.

    கங்கா ஸ்நானம் ஆன பிறகு, காசி விஸ்வநாதரைத் தரிசிக்கச் செல்வது சிறப்பு. இரண்டு பேருக்கு மேல் போக முடியாதபடி மிகக் குறுகலாக இருக்கும் காசியின் சிறிய சந்துகள் (வீதிகளில்) வழியாக நடந்து செல்ல வேண்டும்.

    கோயிலுக்கு நான்கு புறமும் வாயில்கள் உள்ளன. பிரதான வாயிலுக்கு அருகில் பால், பிரசாத இனிப்புகள் விற்கப்படுகிறது. ஒரு டம்ளர் பால் ரூ.10- க்கு கிடைக்கிறது. அதை வாங்கி நம் கைகளாலேயே விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யலாம்.

    கோயிலின் பிரதான வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெண்ணிறப் பளிங்குத் தரை முற்றம். நடுநாயகமாக காசி விஸ்வநாதரின் கருவறை. வாயிலிலிருந்தே தொடங்குகிறது பக்தர்களின் நீண்ட வரிசை. கருவறைக்கும் நான்கு வாசல்கள் உள்ளன. எந்த வரிசையில் வேண்டுமானாலும் நிற்கலாம். கடைசியில் அந்த வரிசை கருவறையில்தான் முடியும். கருவறையின் கீழே, தரையோடு தரையாக நடுநாயகமாக, வெள்ளி நாகாபரணம் அணிவிக்கப்பட்ட மிகச்சிறிய லிங்க வடிவில், வண்ண மலர்களுக்கு நடுவே காசி விஸ்வநாதர் அருள்பாலிக்கிறார். அவரைச் சுற்றிலும் நான்கு புறங்களிலும் மழைநீர்ப் போக்கி போல குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. நாம் கொண்டு சென்றிருக்கும் பாலை அந்தக் குழாய்களில் ஊற்றினால், அவை நேரே விஸ்வநாதரின் திருவடிகளை அடைந்துவிடுகிறது.

    மிகச்சிறிய கருவறையில் இரண்டு மூன்று பூசாரிகள் நின்றுகொண்டு ஆரத்தி காட்டுகிறார்கள். `ஜெய் விஸ்வநாத் ஜி' என்ற பக்தர்களின் கோஷம் காதுகளை நிறைக்கிறது.

    விஸ்வநாதரைத் தரிசித்த பிறகு சுற்றிலும் அருள்பாலிக்கும் பிள்ளையார், ஆஞ்சநேயர், ராமர் சந்நிதிகளை வலம் வருகிறோம். அங்கிருக்கும் நந்தி தேவரின் சிலைக்கும் சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடைபெறுகிறது. சுற்றிலும் உள்ள சந்நிதிகளில் பல்வேறு பெயர்களில் அமைந்த சிவலிங்கங்கள், காசி விஸ்வநாதரைப் போன்றே தரையில் அமைந்திருக்கின்றன. வழிபாடு முடிந்தபின் எந்த வழியில் வந்தோமோ அதே பிரதான வாயில் வழியே வெளியே வந்தால், பேடா, லட்டு போன்ற இனிப்புப் பிரசாதங்களை வாங்கிக் கொள்ளலாம்.

    விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து இரண்டே நிமிட நடை தூரத்தில் அன்னபூரணி கோயில். தங்கக் கவசத்தில் தகதகவென ஜொலிக்கிறாள் அன்னை. கைகளில் அன்னப் பாத்திரமும், கரண்டியும் ஏந்தி, உலக உயிர்களுக்கெல்லாம் குறைவின்றி உணவு வழங்கும் தாயாக, கருணையே வடிவாகக் காட்சியளிக்கும் அன்னபூரணியை மனம் குளிர வணங்கிவிட்டு வெளியே வருகிறோம்.

    மீண்டும் குறுகலான பல சந்துகள் வழியாகப் பயணித்தால், காசி விசாலாட்சி கோயில் வருகிறது. தெருவில் யாரைக் கேட்டாலும் வழி சொல்கிறார்கள்.

    விசாலாட்சி குடிகொண்டிருக்கும் ஆலயமும் மிகச் சிறியதுதான். பக்தர்கள் பலர் அன்னைக்கு, விதவிதமான வண்ணப் புடவையை சார்த்தி வழிபடுகிறார்கள். அன்னையின் மீது சார்த்திய புடவைகளை ஆலயத்துக்குள்ளேயே விற்பனையும் செய்கிறார்கள்.

    விசாலாட்சியை தரிசித்துவிட்டு வெளியே வந்து, மீண்டும் குறுகிய பல சந்துகள் வழியாகப் பயணித்தால் பிரதான சாலையை அடையலாம். காசி வீதிகளில் ஆங்காங்கே சுடச்சுட தேநீர் விற்கப்படுகிறது. சிறிய மண் குவளைகளில் நிறைத்துத் தருகிறார்கள். விலை ரூ.5 மட்டுமே. குமிட்டி அடுப்பில் உடனுக்குடன் தயாரித்து வழங்குகிறார்கள்.

    காசிக்குச் செல்வோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய நிகழ்வுகளில் முக்கியமானது, மாலையில் நடைபெறும் கங்கா ஆரத்தி. காலை முதல் மாலை வரை காசியிலிருக்கும் கோயில்கள், கடைகளுக்கெல்லாம் சென்றுவிட்டு, மாலை சரியாக 5 மணிக்குள் தசஸ்வமேத காட்டுக்கு அருகே இருக்கும் மேடைக்கு பக்தர்கள் வரத் தொடங்கி விடுகிறார்கள். அங்குதான் மாலை சுமார் 6.30 மணியளவில் கங்கா ஆரத்தி தொடங்குகிறது. கங்கா ஆரத்தியை படித்துறை மேடையில் போடப்படும் நாற்காலிகளில் அமர்ந்தும் பார்க்கலாம், கங்கையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளில் (படகுகளில் அமர்ந்து பார்க்க நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணம்!) அமர்ந்தும் பார்க்கலாம்.

    கங்கா ஆரத்தி தொடங்குவதற்கு முன் பக்திப் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுகிறது. படித்துறையிலும், படகுகளிலும் நம் நாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பயணிகள் என்று பலரும் திரளாகக் கூடுகிறார்கள். வானத்தில் கருமை படர ஆரம்பிக்கும் நேரத்தில், படித்துறை மேடைக்கு வருகிறார் தலைமை பூசாரி. அவரைத் தொடர்ந்து மேலும் 6 பூசாரிகள் மேடையேறுகிறார்கள்.

    பூசாரிகள் முதலில் கங்கைக் கரைக்கு வந்து, அன்றைய தினம் யாருடைய சார்பில் பூஜை நடைபெறுகிறதோ அந்தக் குடும்பத்தினரை அழைத்து சில மந்திரங்களைக் கூறி, கங்கைக்கு தீப தூப ஆராதனை காட்டுகிறார்கள். பிறகு ஆரத்தி காட்டுகிறார்கள். பிறகு மீண்டும் மேடைக்குச் சென்று பலவிதமான வழிபாடுகளைச் செய்கிறார்கள்.

    இதில் வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், பூசாரிகள் எல்லோருமே ஒரே மாதிரியாக, கொஞ்சமும் பிசகாமல் ஒரே தாள கதியில் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து பூஜை செய்வதுதான்.

    கருமை பூத்த வானமும், கங்கையின் பிரவாகமும், மணியோசையும், பூஜைப் பொருட்களின் நறுமணமும் சேர்ந்து நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது நிஜம். ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் நம் மனதை இறைவனுடன் ஒன்று கலக்கச் செய்துவிடும் அற்புத அனுபவம் இந்த கங்கா ஆரத்தி. கங்கா ஆரத்தி முடிந்ததும், பூஜை நடந்த மேடைக்குப் போய் ஆரத்தியைத் தொட்டு கண்களில் ஒத்திக் கொள்ளலாம். சிறு சிறு வெண்ணிற மணிகளைப் போன்ற இனிப்புருண்டைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    அந்த இரவில் படகுப் பயணம் செய்ய விரும்புபவர்கள், படகில் ஏறிப் பயணிக்கலாம். இரவு நேரத்தில் கங்கையைச் சுற்றிக்காட்ட தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பகலில் கங்கையைப் பார்த்து ரசிப்பது ஒருவித அனுபவம என்றால், இரவில் மெய் சிலிர்க்க பவனி வருவது வேறொரு வகையான அனுபவம். உண்மையில், `எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்றுதான் நினைக்கத் தோன்றியது.

    காசியில் மேற்கூறிய இடங்களைத் தவிர, சற்றே தொலைவில் இருக்கும் கால பைரவர் கோயிலும் வெகு பிரசித்தம். போக வர ஒரு மணி நேரம் ஆகலாம். ஆட்டோ அல்லது ரிக்‌ஷாவில் பயணிக்க முடியும். நேரமிருப்பவர்கள் காசியில் இருக்கும் சங்கர மடம், அங்கு எழுந்தருளியிருக்கும் சிவன் கோயிலுக்கும் போய் வரலாம். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், மகாகவி பாரதியார் தங்கியிருந்த வீடு என்று சில முக்கிய இடங்களும் உள்ளன.

    காசியில் முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்க்க இரண்டு தினங்கள் போதுமானது. காசியிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) சென்று, திரிவேணி சங்கமத்தில் நீராடி, அங்கிருக்கும் சில ஆலயங்களைத் தரிசித்துவிட்டு, பாரதத்தின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லமான ஆனந்த பவனத்தைச் சுற்றிப் பார்க்க விரும்பினால், மேலும் ஒரு நாள் தேவைப்படும். வாரணாசி நகரம் முழுவதும் அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப சுற்றுலா விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் இங்கு தங்கியிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம். சென்னையில் இருந்து காசிக்கு ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதியும் உள்ளது.

    - ஜி.மீனாட்சி

    Next Story
    ×