என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கிருஷ்ண பக்தர் சூர்தாஸ்
- சூர்தாஸ், ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் இயற்றினார் என்று சொல்லப்படுகிறது.
- திரையைத் திறக்காமலேயே சூர்தாஸைப் பாடச் சொன்னார்கள்.
சூர்தாஸைக் கண்ணில்லாதவர் என்பது சரியா? அவருக்குப் புறக் கண்கள் தான் இருக்கவில்லை. ஆனால் அகக் கண்கள் பல மடங்கு ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தன.
கிருஷ்ண பக்திக் கவிஞரான சூர்தாஸ் 104 வயது வாழ்ந்தார். (1479 முதல் 1583 வரை.). அவரின் இயற்பெயர் தெரியவில்லை. `ஸ்வரங்களின் அடிமை` என்ற வகையில் மக்கள் அவருக்கு இட்டு வழங்கிய செல்லப் பெயரே ஸ்வர தாசர் எனப் பொருள் தரும் `சூர்தாஸ்`.
சூர்தாஸ், ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் இயற்றினார் என்று சொல்லப்படுகிறது. இப்போது கிடைப்பவை எட்டாயிரம் பாடல்கள் மட்டுமே. `சூர் சாராவளி, சாகித்ய லகரி, சூர் சாகர்` எனப் பற்பல தொகுப்புகள் வெளிவந்துள்ளன. `ஹே தீன்தயாள் கோபால் ஹரி` என்ற சூர்தாஸ் பாடல் எம்.எஸ். சுப்புலட்சுமியின் தேனினும் இனிய குரலில் இன்றும் கேட்பவர்களை உருக்குகிறது.
குழந்தைக் கண்ணனைப் பற்றிய சூர்தாசின் கவிதைகள் நெஞ்சை அள்ளுபவை. கண்ணனுக்கு முதல் பல் விழுவது, கண்ணன் தவழ்ந்தே வாயில்படி தாண்டியது என்றிப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை அவரது கவிதைகள் பேசுகின்றன.
சூர்தாஸ் பெரும்பாலும் யசோதை, நந்தகோபர் மனநிலையில் இருந்து கண்ணனைக் குழந்தையாகவே கண்டார். சூர்தாசின் திருச்சரிதம் நெஞ்சை உருக்குவது....
சூர்தாஸ் மதுரா அருகே பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கண்ணில்லாத அவர் சிறுவயதில் பெரும் துன்பங்களையும் அவமானங்களையும் அனுபவித்தார். மூன்று சகோதரர்களும் கிண்டலும் கேலியும் செய்வார்கள். பெற்றோரே அவரைப் புறக்கணித்தனர்.
அற்புதமான குரல் அவருக்கு. திண்ணையில் அமர்ந்து சன்னமாகப் பாடிக் கொண்டே இருப்பார். வீட்டின் வெளியே தெருவில், அதிகாலையில் பக்தர்கள் கிருஷ்ண பஜனை செய்தவாறே போவதுண்டு.
அந்தப் பாடல்களைக் கூர்ந்து கேட்பார். அவற்றைப் பாடுவார். மெல்ல மெல்லத் தானே பாடல் இயற்றிப் பாடவும் தொடங்கினார்.
அவரின் ஆசை வெளியுலகத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பது. ஆனால் பெற்றோர்தான் வெளியே செல்லவே அனுமதிப்பதில்லையே? ஒருநாள் அதிகாலை எழுந்த சிறுவன் சூர்தாஸ் மனச் சோர்வோடு இல்லத்தின் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தார். வீட்டின் உள்ளே எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
அவர் செவிகளில் கிருஷ்ண பஜனை ஒலி கேட்டது. வெளியூர் பக்தர்கள் அதிகாலை வேளையில் கிருஷ்ண பக்தி கானங்களைப் பாடிக் கொண்டு மதுரா ஆலயத்திற்கு அவர் வீடிருந்த வீதி வழியே சென்று கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு முடிவெடுத்தார் சூர்தாஸ். பாட்டுப் பாடிக் கொண்டு சென்ற குழுவினருடன் இணைந்து வெளியே நடந்தார்.
மதுரா சென்றுகொண்டிருநத அவர்கள் ஒரு நாள் முழுவதும் நடந்துசென்று அன்றிரவு ஓர் ஆல மரத்தடியில் தங்கினார்கள். தங்களுடன் தானாய் வந்திணைந்து கொண்ட கண்ணில்லாத சிறுவனை என்ன செய்வது?
திருப்பூர் கிருஷ்ணன்
செல்லும் வழியில் அவன் ஒரு பெரிய சுமை அல்லவா? அவனைக் கவனித்துக் கொள்வது யார்? அந்த மரத்தடியிலேயே அன்று அனைவரும் உறங்கினார்கள்.
மறுநாள் அதிகாலை. சிறுவன் சூர்தாஸ் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பாமலே அந்த பக்தர் கூட்டம் சத்தமில்லாமல் விலகிச் சென்றது. சிறுவன் துயில் கலைந்தபோது அருகே யாருமில்லை.
இப்போது என்ன செய்வது? சூர்தாஸ் கல்லும் கனிந்துருகும் குரலில் கண்ணனைக் குறித்துத் தாமே இயற்றிய பக்திப் பாடல்களைப் பாடலானார். அவரது மதுரக் குரல் காற்று வெளியில் கலந்தது.
அருகேயிருந்த கிராமத்திலிருந்து சில பெண்மணிகள் அந்த மரத்தடியில் பல்தேய்க்க வந்தார்கள். சூர்தாசின் பாடல்களைக் கேட்டு அவர்கள் மனம் கரைந்தது. அவர்கள் அந்தச் சிறுவனின் பார்வையற்ற கண்ணில் பெருகிய கண்ணீரைத் தங்கள் விரல்களால் துடைத்தார்கள்.
ஒருத்தி அவரைக் குளத்திற்கு அழைத்துச் சென்று பல்தேய்த்து விட்டாள். இன்னொருத்தி பரிவோடு அவரை நீராட்டினாள். ஒரு பெண்மணி ஓடோடிப் போய் சப்பாத்தி கொண்டுவந்து ஊட்டினாள்.
அந்தச் சிறுவனின் குரலினிமையில் மனம் பறிகொடுத்த அவர்கள், அந்தக் குரலிலும் பக்தியிலும் மெய்ம்மறந்தார்கள்.
ஒரு தாயால் புறக்கணிக்கப்பட்ட சூர்தாசுக்கு எண்ணற்ற தாய்கள் கிடைத்தார்கள். அந்த மரத்தடியிலேயே சூர்தாஸ் வாழலானார். அவ்வழியே வந்த வழிப் போக்கர்கள் அவர் பாடலில் சொக்கினார்கள். அவருக்குக் காசு தந்தார்கள்...
அப்போதுதான் அந்த விந்தையான சம்பவம் நடந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு செல்வந்தரின் மகன் காணாமல் போனான். அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருக்கிறானா, இல்லை ஆற்றில் குளத்தில் எங்காவது தவறி விழுந்து இறந்து விட்டானா?
செல்வந்தரின் மனைவி, சூர்தாஸ் தங்கியிருந்த மரத்தடியில் வந்து, ஆற்ற மாட்டாமல் அருகேயிருந்த பெண்ணிடம் அழுது புலம்பினாள். அவளைத் தன் அருகே அழைத்தார் சூர்தாஸ். கண்ணனைத் தியானித்தார். அவர் மனத்தில் ஒரு காட்சி விரிந்தது.
சவுக்குத் தோப்புக்கள் நிறைந்த கானகத்தில் ஒரு பாழும் மண்டபத்தில் வழிதெரியாமல் அழுது அழுது அவன் மயங்கிக் கிடக்கிறானே! அவன் எங்கே இருக்கிறான் என்று ஞானக் கண்ணால் கண்டு சொன்னார் சூர்தாஸ். அவனைக் கண்டுபிடிக்கச் செல்ல வேண்டிய திசை, அதற்கான வழி, மண்டபத்தின் அடையாளம் அனைத்தையும் விவரித்தார்.
அவள் கணவரைத் தேடி ஓடினாள். சூர்தாஸ் சொன்ன தகவல்களைச் சொன்னாள். திகைத்த செல்வந்தர் ஆட்களோடு அந்தக் கானகத்திற்கு விரைந்தார். விந்தையிலும் விந்தை. சூர்தாஸ் குறிப்பிட்ட அதே இடத்தில் செல்வந்தரின் மகன் மயங்கிக் கிடந்தான்!
மகனை அள்ளி அணைத்துக் கொண்ட செல்வந்தர் யோசித்தார். ஏறக்குறைய அவர் மகன் வயதேயான சூர்தாஸால் அல்லவா அவருக்கு மகன் மறுபடி கிடைத்தான்? தன் நன்றியைக் காட்ட முடிவுசெய்தார்.
சூர்தாஸ் வாழ்ந்த மரத்தடியிலேயே அவருக்கு வசிக்க ஒரு குடில் கட்டித் தந்தார். இப்போது மழையாலும் வெய்யிலாலும் பாதிக்கப் படாமல் குடிலில் வசிக்கலானார் சூர்தாஸ்.
கண்ணில்லாத ஒரு மகான் கண்ணன்மேல் தாமே பாடல்கள் இயற்றி அற்புதமாகப் பாடுகிறாராமே! விஷயம் பரவியதால் அவரது தெய்வீககானத்தைக் கேட்க மக்கள் பல்வேறிடங்களில் இருந்து திரண்டார்கள்.
வருபவர்களெல்லாம் அந்த தெய்வீகக் கவிஞருக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினார்கள். சூர்தாஸ் தமக்குக் கிடைத்த செல்வத்தையெல்லாம் தம்மை ஆதரித்த அந்த கிராமத்துத் தாய்மார்களுக்கே வழங்கிவிட்டார்.
அவரது பெரும்புகழ் அவர் பிறந்த கிராமத்தை எட்டாதிருக்குமா? அவரது சகோதரர்களும் தாயும் தந்தையும் இணைந்து வந்தார்கள். குடும்பம் அவரைப் புறக்கணித்ததற்காக மன்னிப்பு வேண்டினார்கள். மீண்டும் குடும்பத்தோடு அவர் வந்து இணைய வேண்டும் எனவும் வேண்டினார்கள். இப்போது உலகம் முழுவதுமே என் குடும்பம்` என்று சொல்லி அவர்கள் வேண்டுகோளை கனிவாக மறுத்துவிட்டார் சூர்தாஸ்...
சூர்தாசின் சம காலத்தில் வல்லபாச்சாரியார் என்ற ஒரு மகான் வாழ்ந்து வந்தார். சம்ஸ்க்ருத பக்திக் கவிஞர். மதுரமான மதுராஷ்டகத்தை எழுதியவர். வல்லபாச்சாரியாருக்குச் சிஷ்யராக வேண்டும் என்ற தாளாத வேட்கை சூர்தாசுக்கு இருந்தது. யமுனை நதிக் கரைக்கு அதிகாலையில் அவர் நீராட வருவார் என்றறிந்து படித்துறைக்குச் சென்றார். தாம் எழுதிய பாடல்களை உருக்கமாகப் பாடியவாறே அவரது வருகைக்காகக் காத்திருந்தார்.
வல்லபாசார்யர் அந்த மதுரக் குரலைக் கேட்டு அவரைத் தேடி வந்தார். அவர் பாதங்களில் விழுந்து பணிந்தார் சூர்தாஸ். அவரை அள்ளி அணைத்துக் கொண்ட வல்லபாச்சாரியார் அவரைச் சீடராக ஏற்றார். வல்லபாச்சாரியார், சூர்தாசுக்கு பாகவதம் முழுவதும் கற்றுத்தந்தார். வல்லபாச்சாரியாரின் முக்கியமான எட்டுச் சீடர்களில் ஒருவராகப் பிறகு அறியப்பட்டார் அவர்...
தம் குரு வல்லபாச்சாரியாரின் உதவியால் மதுரா கோயிலில் ஆஸ்தான பாடகராகச் சேர்ந்தார் சூர்தாஸ். ஒவ்வொரு நாளும் கண்ணனுக்கு விதவித அலங்காரங்கள் செய்வார்கள் அர்ச்சகர்கள். கண்ணில்லாத சூர்தாஸ் அன்றன்று என்ன நிறப் பட்டுப் பீதாம்பரத்தைக் கண்ணன் அணிந்திருக்கிறான் என்பதைத் தம் பாடலில் சொல்லிப் பாடுவார்.
கண்ணில்லாத சூர்தாஸ் எப்படி ஒவ்வொருநாளும் கண்ணன் அணிந்த உடையின் நிறத்தைச் சரியாகத் தன் பாடலில் இணைத்துச் சொல்கிறார்? அர்ச்சகர்களுக்கு ஆச்சரியம். ஒருநாள் திரைச் சீலையால் கிருஷ்ண விக்கிரகத்தை மறைத்து கண்ணனுக்கு உடையே அணிவிக்காமல் முத்து மாலைகளையே உடைபோல அணிவித்து அலங்கரித்தார்கள்.
திரையைத் திறக்காமலேயே சூர்தாஸைப் பாடச் சொன்னார்கள். `கண்ணா! உன் முத்துப் பல் வரிசைக்குப் பொருத்தமாக இருக்கட்டும் என்று ஆடையில்லாமல் இன்று முத்தாலேயே உடை அணிந்தாயா நீ?` என அன்று சூர்தாஸ் பாடியதும் அர்ச்சகர்கள் ஓடோடி வந்து சூர்தாசின் பாதங்களில் விழுந்து பணிந்தார்கள்.
நூற்று நான்கு வயதான தருணத்தில் கண்ணன் சூர்தாஸை வைகுந்தத்திற்கு அழைத்துக் கொள்ள விரும்பினான். ஓர் அடியவர் சூர்தாசிடம் `நீங்கள் கண்ணனைப் பற்றி எண்ணற்ற பாடல்களைப் பாடினீர்கள், உங்கள் குரு வல்லபாச்சாரியாரைப் பற்றி ஒரு பாடல் கூடப் பாடவில்லையே?` எனக் கேட்டார்.
சூர்தாஸ் அந்த அடியவரின் வேண்டு கோளை ஏற்றார். தம் குரு வல்ல பாச்சாரியார் பற்றி உள்ளம் உருக ஒரு
பாடலைப் பாடியவாறே மண்ணில் சரிந்தார். அவர் ஆன்மா விண்ணில் பறந்து கண்ணனுடன் கலந்தது.
சூர்தாசின் சில பாடல்கள் இந்தித் திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன. சூர்தாஸருக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com






