என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி-விழுப்புரம் இடையே மேலும் ஒரு வாரம் மெமு ரெயில் சேவை ரத்து
- விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- ரெயில் சேவை தஞ்சாவூர் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே புதுச்சேரி-விழுப்புரம் இடையே தினசரி காலை இயக்கப்படும் மெமு ரெயி்ல்கள் ஏற்கனவே வருகிற 5-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம்-புதுச்சேரிக்கு தினமும் காலை 5.25 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (வண்டி எண்:66063) வருகிற 6-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 8.05 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (வண்டி எண்:66064) வருகிற 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு தினமும் காலை 6.35 இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:66051) வருகிற 10, 12-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் 15 நிமிடங்கள் காலதாமதமாக புதுச்சேரி வந்தடையும்.
திருச்சி-காரைக்காலுக்கு காலை 8.35 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:76820) வருகிற 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் சேவை தஞ்சாவூர் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் காரைக்கால்-திருச்சிக்கு மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:76819) காரைக்காலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தஞ்சாவூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் சேவை காரைக்கால்-தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






