என் மலர்
இந்தியா

வாலிபரை மயக்கி நிர்வாண படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த இளம்பெண்
- நிர்வாண படங்களை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிந்து கவுரி, அன்சிகா, முகம்மது அபிப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் "ஹனி டிராப்" மோசடி அதிகளவில் நடந்துவருகிறது. இதில் வாலிபர்கள் மட்டுமின்றி வயதானவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களும் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
அவமானம் கருதி பலர் பணத்தை இழந்த விவகாரத்தை வெளியே கூறுவதில்லை. இதனால் "ஹனி டிராப்" மோசடியில ஈடுபடும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டியபடி இருக்கிறது. இந்தநிலையில் வாலிபர் ஒருவர் "ஹனி டிராப்" மோசடியில் சிக்கி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
அவர் கூறிய புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு, மாவேலிக்கரையை சேர்ந்த கவுரி நந்தா என்ற 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி வாலிபருடன், இளம்பெண் நட்பாக பழகி வந்துள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபரை ஆசைவார்த்தை கூறி கோழிக்கோடு குந்த மங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்பேரில் அந்த வாலிபரும் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வாலிபரை அந்த இளம்பெண் நிர்வாண படங்கள் எடுத்துள்ளார்.
பின்பு அந்த படங்களை காண்பித்து இளம்பெண் கவுரி நந்தா, மேலும் அவருடன் இருந்த திருரங்கடி பனஞ்சேரியை சேர்ந்த அன்சிகா(28), மற்றும் அவரது கணவர் முகமது அபிப் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
நிர்வாண படங்களை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்தவாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கவுரி உள்ளிட்ட 3 பேரும் அந்த வாலிபரை தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பறித்துள்ளனர்.
இதனால் அவர்களின் மீது அந்த வாலிபர், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கவுரி, அன்சிகா, முகம்மது அபிப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.






