என் மலர்tooltip icon

    இந்தியா

    சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்
    X

    கணவர் மகன்களுடன் லலிதா.

    சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்

    • கணவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளதாக மகன்களுக்கு லலிதா தெரிவித்தார்.
    • மகன்கள் யாரும் தந்தையை பார்க்க வரவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத்.

    இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு தினேஷ், முகேஷ் என 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் தினேஷ் கர்னூலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். முகேஷ் கனடா நாட்டில் டாக்டராக உள்ளார்.

    ஹரிகிருஷ்ண பிரசாத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்தார்.

    கணவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளதாக மகன்களுக்கு லலிதா தெரிவித்தார். ஆனால் மகன்கள் யாரும் தந்தையை பார்க்க வரவில்லை.

    மகன்கள் தங்களை வந்து பார்க்கவில்லையே என கணவன்- மனைவி இருவரும் மனவேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் ஹரிகிருஷ்ண பிரசாத் நேற்று காலை இறந்தார். தந்தை இறந்தது குறித்து மகன்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் சொத்துக்காக சண்டை போடுவார்கள் என லலிதா கூறாமல் விட்டுவிட்டார்.

    உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கவில்லை. இறந்து போன கணவரின் உடலையே பார்த்துக் கொண்டே இருந்தார். இதையடுத்து வீட்டில் இருந்த அட்டைப்பெட்டிகள், பழைய புத்தகங்கள் மற்றும் துணிகளை எடுத்து வந்து கணவர் உடல் மீது போட்டு தீ வைத்து எரித்தார்.

    வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஹரிகிருஷ்ண பிரசாத் உடல் எரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தீயை அனைத்து ஹரி கிருஷ்ணா பிரசாத்தின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×