என் மலர்
இந்தியா

துப்பாக்கி லைசென்ஸ் வேண்டுமா, 10 மரக்கன்று நடவேண்டும்: மதுரா கலெக்டரின் நூதன உத்தரவு
- மரங்களைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பு விண்ணப்பதாரர்களிடமே உள்ளது.
- இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிக்கிறது.
லக்னோ:
பல்வேறு தேவைகளுக்காகவும், வசதிகளுக்காகவும் மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் வெப்பநிலை 45 முதல் 50 டிகிரி செல்சியசை தொட்டு சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மரங்கள் நடுவதை ஊக்குவிக்க உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா கலெக்டர் வித்தியாசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். துப்பாக்கி லைசென்ஸ் வேணும் என்றால் 10 மரத்தை நடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
விண்ணப்பதாரர்கள் மாவட்டத்திற்குள் எங்கும் தனியார் நிலத்திலோ அல்லது பொது நிலத்திலோ 10 மரங்களை நடவேண்டும். விண்ணப்பத்தை தோட்டத்திற்கான புவி-குறியிடப்பட்ட சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆயுத உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் இருந்த அனைத்து நிபந்தனைகளுக்கும் கூடுதலாக புதிய நிபந்தனை பொருந்தும்.
இந்த நடவடிக்கை குடிமக்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மரங்களைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பு விண்ணப்பதாரர்களிடமே உள்ளது. நடப்பட்ட மரக்கன்றுகளின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இது ஒரு முக்கியமான படியாகும். இந்த முயற்சி நிர்வாகப் பொறுப்புகளுடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பேணுவதில் குடிமக்களின் கூட்டுக் கடமையையும் வலுப்படுத்துகிறது என தெரிவித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்த உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






