search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலத்தை கடக்க முயன்ற போது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இளம்பெண் பலி
    X

    பாலத்தை கடக்க முயன்ற போது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இளம்பெண் பலி

    • காரை வேகமாக இயக்கி டிரைவர் பாலத்தை கடக்க முயன்றார். அப்போது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
    • காரில் இருந்த 5 பேரும் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக மவுனிகா மனம் தளராமல் தனது செல்போன் மூலம் நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பி கொத்தகோட்டா மண்டலம் தொகலப்பள்ளியை சேர்ந்தவர் ரமணா. தனியார் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மகள் மவுனிகா (வயது 22), பி.டெக் முடித்துவிட்டு பெங்களூரில் பணிபுரிந்து வந்தார்.

    ரமணா தனது மனைவி உமாதேவி (37) மற்றும் உறவினர் ஸ்ரீநிவாசுலு (39), ஆகியோர் தனியார் கார் டிரைவருடன் பெங்களூருவுக்கு சென்றனர். பின்னர் தனது மகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு காரில் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பலத்த மழை பெய்ததால் சம்பாதி கோட்டா என்ற இடத்தில் ஆற்றின் நடுவில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்று கொண்டு இருந்தது.

    காரை வேகமாக இயக்கி டிரைவர் பாலத்தை கடக்க முயன்றார். அப்போது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் காரில் இருந்த 5 பேரும் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக மவுனிகா மனம் தளராமல் தனது செல்போன் மூலம் நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனை அறிந்து உடனடியாக அங்கு வந்த அப்பகுதி மக்கள் உதவியுடன் போலீசார் கயிறு கட்டி காரை வெளியே எடுத்தனர். இதில் கார் டிரைவர் உட்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், மவுனிகா மட்டும் காரில் இருந்த அனைவரையும் காப்பாற்ற கடைசி மூச்சு வரை முயன்ற நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

    பின்னர், பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் மவுனிகாவின் உடல் பாலத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×