என் மலர்
இந்தியா

திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ விழாவில் 1 மணி நேரத்திற்கு முன்னதாக கருட சேவை
- சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எப்பொழுது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம் என கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
- திருப்பதியில் நேற்று 71,361 பேர் தரிசனம் செய்தனர். 24,579 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது :-
ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவம் வருகிற 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி நிறைவு பெறுகிறது.
இதில் முக்கிய வாகன சேவையான கருட சேவை 19-ந்தேதியும், 21-ந்தேதி புஷ்பக விமானம், 22-ந்தேதி தங்க ரதம், 23-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. கருட சேவை வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கப்படும்.
ஆனால் அதனை 1 மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கினால் காலை முதல் நான்கு மாட வீதியில் காத்திருக்கும் பக்தர்களை விரைவில் சாமி தரிசனம் செய்து வைக்க முடியும்.
இது தொடர்பாக கோவில் அர்ச்சகர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அவர்களும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எப்பொழுது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
இதுகுறித்து மீண்டும் ஒரு முறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அர்ச்சகர்களுடன் ஆலோசித்து கருட சேவை மட்டும் மாலை 6.15-க்கு அல்லது 6.30 மணிக்கே தொடங்குவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 71,361 பேர் தரிசனம் செய்தனர். 24,579 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலை பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. நேர ஒதுக்கீடு இலவச தரிசன பக்தர்கள் சுமார் 6 மணிநேரமும் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






