என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி வருகை
    X

    பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி வருகை

    • தரிசனம் முடிந்து பிரதமர் மோடி மீண்டும் விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
    • திருப்பதி முழுவதும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர்.

    திருப்பதி:

    பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 26-ந் தேதி மாலை திருப்பதி வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வரும் பிரதமர் மோடி 26-ந் தேதி மாலை 6.55 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார்.

    பிரதமர் மோடியை ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் பரமேஸ்வரர் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கோத்துக் கொடுத்து வரவேற்கின்றனர்.விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு வருகிறார். அன்று இரவு திருமலையில் உள்ள ரச்சனா விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    திங்கட்கிழமை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து காலை 10.25 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி திருப்பதி வருகையையொட்டி அவர் தங்க உள்ள ரச்சனா விருந்தினர் மாளிகையை மத்திய மாநில உளவுத்துறை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர சோதனை நடத்தினர்.

    மேலும் பிரதமர் மோடி வருகை தரவுள்ள ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருமலை வரை மத்திய உளவுத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 26-ந் தேதி வி.ஐ.பி பிரேக் தரிசன பரிந்துரை கடிதங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×