பண மோகத்தால் சுகேசுடன் நெருங்கி பழகிய ஜாக்குலின்- ரூ.7.12 கோடி, நகைகளை பெற்றதாக அமலாக்கத்துறை தகவல்

சுகேசிடம் இருந்து நிதி பலன்களை ஜாக்குலின் பெற்று உள்ளார். ஜாக்குலின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் சுகேசுடான உறவு மூலம் பணப் பலன்களை அடைந்துள்ளனர்.
பண மோகத்தால் சுகேசுடன் நெருங்கி பழகிய ஜாக்குலின்- ரூ.7.12 கோடி, நகைகளை பெற்றதாக அமலாக்கத்துறை தகவல்
Published on

புதுடெல்லி:

டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடை தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அவருடன் தொடர்பில் இருந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசையும் அமலாக்கத்துறை விசாரித்தது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் அவருக்கு பரிசு பொருட்களை அளித்து உள்ளார்.

இதனால் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான நிதி மோசடி வழக்கில் ஜாக்குலினை குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்தது. சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவரது பெயரும் இடம்பெற்று இருந்தது. தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை ஜாக்குலின் நிராகரித்து இருந்தார்.

இந்தநிலையில் சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே அவருடன் பண மோகத்தால் ஜாக்குலின் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்து இருந்த குற்ற பத்திரிகையில் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

சுகேஷ் சந்திரசேகரின் கடந்த கால குற்றங்களை நடிகை ஜாக்குலின் நன்கு அறிந்திருந்தார். லீனா மரியாபால்தான் சுகேஷின் மனைவி என்பதும் தெரிந்து இருந்தது. இதையெல்லாம் ஜாக்குலினுக்கு அவரின் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஷான் என்பவர்தான் தெரிவித்து இருந்தார்.

ஜாக்குலின் அவற்றை அறிந்தே அதை புறக்கணித்து சுகேசுடன் உறவை தொடர்ந்தார்.

சுகேசிடம் இருந்து நிதி பலன்களை ஜாக்குலின் பெற்று உள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் சுகேசுடான உறவு மூலம் பணப் பலன்களை அடைந்துள்ளனர். அவர்கள் பெற்றவை அனைத்தும் சுகேஷ் செய்த குற்றத்தின் மூலம் கிடைத்தவையாகும்.

சுகேசிடம் இருந்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 5 கைக்கடிகாரம், 20 நகைகள், 47 ஆடைகள், 32 பேக்குகள், 4 ஹெர்ம்ஸ் பேக்குகள், 9 ஓவியங்கள் மற்றும் ஒரு வெர்சேஸ் கிராக்கரி செட் (விலை உயர்ந்த செராமிக் பாத்திரம்) ஆகியவற்றை பெற்று உள்ளார்.

ஏப்ரல் 2021-ல் ஜாக்குலினின் பெற்றோருக்கு சுகேஷ் 2 கார்களை பரிசளித்துள்ளார். அதை அவர் தனது விசாரணையின் போது வெளியிடவில்லை.

இது மட்டுமல்லாமல் ஜாக்குலின் ரூ.7.12 கோடியும், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ.15 லட்சத்தையும் சுகேசிடம் இருந்து பெற்றுள்ளனர். இவைகளுடன் ரூ.5.71 கோடி மதிப்பிலான பரிசுகளையும் வாங்கி உள்ளனர்.

பணத்தின் மீதான மோகம் காரணமாகவே சுகேசின் குற்றங்களை பொருட்படுத்தாமல் தெரிந்தே அவருடன் பழகி குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை வாங்கி உள்ளார். இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் விசாரணையின் போது சுகேஷ் சந்திர சேகர் மீதான வழக்குகள் பற்றி தனக்கு ஒரு போதும் தெரியாது என்று ஜாக்குலின் கூறியது தவறானது. மேலும் தான் சுகேசால் பாதிக்கப்பட்டதாக தொடர்ந்து கூறி வந்த ஜாக்குலின் விசாரணையின் போது அதை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை.

விசாரணையில் இருந்து தப்பிக்க பொய் கதையை ஜாக்குலின் வெளிப்படுத்தினார் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

சுகேசுடனான உறவை மறைக்க ஜாக்குலின் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனது செல்போனில் இருந்த தகவல்களை அழித்துள்ளார். அதோடு தனது ஊழியர்களின் செல்போன் மூலம் சுகேசை தொடர்பு கொண்ட தரவுகளையும் மறைத்துள்ளார்.

இவ்வாறு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com