என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் கன மழையால்  பள்ளியை சூழ்ந்த வெள்ளம்- 150 மாணவிகள் வெளியேற முடியாமல் தவிப்பு
    X

    கர்நாடகாவில் கன மழையால் பள்ளியை சூழ்ந்த வெள்ளம்- 150 மாணவிகள் வெளியேற முடியாமல் தவிப்பு

    • பள்ளிக்கு பிரதான ஓடையை கடந்துதான் மாணவ-மாணவிகள் செல்வது வழக்கம்.
    • பள்ளிக்கு சென்றுவர உரிய சாலை வசதிகள் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள் வெளியே வர முடியாமல் தவித்த சம்பவம் நவ்வலகுண்டா பகுதியில் நடந்துள்ளது.

    ஹூப்பள்ளி மாவட்டம் நவலகுண்டா பகுதியில் நேற்று கன மழை பெய்தது. இந்த கன மழையினால் ஓடைகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. இந்த பகுதியில் அரசு பள்ளி ஊரின் வெளிப்பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த பள்ளிக்கு பிரதான ஓடையை கடந்துதான் மாணவ-மாணவிகள் செல்வது வழக்கம். நேற்று மாலை பெய்த மழையின்போது இந்த பள்ளியில் 150 மாணவ-மாணவிகளும் 4 ஆசிரியர்களும் இருந்தனர்.

    அப்போது திடீரென ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மழை வெள்ளம் பள்ளியை சூழ்ந்தது. இதன்காரணமாக மாணவர்கள் வெளியேற முடியாத நிலை உண்டானது.

    இதை தொடர்ந்து மாணவ-மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலேயே இருந்தனர். சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை பின்னர் ஓய தொடங்கியது.

    இதனால் வெள்ளம் வடிய ஆரம்பித்தது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு பின்னர் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் டிராக்டர் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    இந்த பள்ளியை சுற்றிலும் வயல்வெளிகள் உள்ளன. பள்ளிக்கு சென்றுவர உரிய சாலை வசதிகள் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    சவதத்தியில் உள்ள எல்லம்மா கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு கனமழை காரணமாக தண்ணீர் புகுந்தது. இதனால் கோவில் படிக்கட்டுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.

    கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஊழியர்கள் வெளியேற்றினர்.இதுபோல் பெங்களூருவில் இரவில் மட்டும் மழை பெய்து வருகிறது. அதுபோல் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    ராஜாஜிநகர், மெஜஸ்டிக், பசவேஸ்வராநகர், விஜயநகர், மாகடி ரோடு, யஷ்வந்தபுரம், விதான சவுதா, உப்பார்பேட்டை, சிக்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×