search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிக்கிமில் மீட்பு பணிகள் தீவிரம்: 8 பேர் உடல்கள் மீட்பு
    X

    சிக்கிமில் மீட்பு பணிகள் தீவிரம்: 8 பேர் உடல்கள் மீட்பு

    • சிக்கிம் முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங்கை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, கனமழை, வௌ்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
    • சிக்கிமின் மங்கான், காங்டாக், பாக்யோங், நம்சி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 8-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் லோனாக் ஏரி உள்ளது.

    இந்த ஏரிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மேக வெடிப்பால் கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதனால், அங்குள்ள லாச்சன் பள்ளத்தாக்கில் பாயும் டீஸ்டா நதியில் நள்ளிரவுக்கு மேல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள சுங்தாங் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டதால் அதிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனால் அந்த அணையின் கீழ் நீரோட்டப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகளில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு வெள்ளம் உயர்ந்து காட்டாறாய் சீறிப்பாய்ந்தது.

    ஆறுகளையொட்டி வசிப்பவர்கள் உஷாராகாத நிலையில் இருந்ததால் பெரும்பாலானோர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். கோலிடார், சிங்டாம் பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 45 பேர் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்களில் 18 பேர் காயமடைந்திருந்தனர். ஏராளமான வீடுகளும், கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பல கட்டிடங்கள் வெள்ளம், சேற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

    தலைநகரான காங்டாக், வெள்ளத்தால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டீஸ்டா நதியையொட்டிய டிக்சு, சிங்டாம், ராங்போ உள்ளிட்ட பல நகரங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 10, பல இடங்களில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

    மேலும் பல இடங்களில் டீஸ்டா நதியின் குறுக்கே அமைந்துள்ள பாலங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த திடீர் கனமழையால் ராணுவத்தினர், அவர்களின் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட 22 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர். மேலும் 41 ராணுவ வாகனங்கள் சேற்றில் சிக்கியுள்ளன. ராணுவ வீரர்கள் தவிர, ராணுவத்தின் சாலை கட்டுமானப் பணி தொழிலாளர்கள் இருவர் உள்ளிட்ட 26 பேர் மாயமாகி இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ராணுவத்தினரும், மீட்புப் படையினரும் அதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திடீர் கனமழை, வெள்ளத்தை பேரிடராக அறிவித்துள்ள சிக்கிம் மாநில அரசு, மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. பல நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் நூற்றுக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சென்று சேருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் சிக்கிம் முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்டாம் நகரத்துக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய அவர், விழிப்புடன் கண்காணிப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'பாதிக்கப்பட்ட மக்களுடன் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த இயற்கைச் சவாலை எதிர்கொள்ள எங்கள் குழுக்கள் இரவுபகலாக செயல்பட்டு வருகின்றன' என்று கூறியுள்ளார்.

    சிக்கிமின் மங்கான், காங்டாக், பாக்யோங், நம்சி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 8-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சிக்கிம் முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங்கை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு, கனமழை, வௌ்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'சிக்கிம் மாநிலத்தில் துரதிர்ஷ்டமான இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து முதல்-மந்திரி தமாங்கிடம் கேட்டறிந்தேன். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தேன். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நலத்துக்காக நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    டார்ஜிலிங் எம்.பி. ராஜு பிஸ்தாவும் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு, வெள்ள நிலைமை குறித்து விளக்கினார்.

    மாயமான ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நலமுடன் மீட்கப்பட பிரார்த்திப்பதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    டீஸ்டா நதி, மேற்கு வங்காள மாநிலத்திலும், வங்காளதேசத்திலும் பாய்வதால் அங்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்துவரும் நிலையில், காலிம்பாங், டார்ஜிலிங், அலிப்பூர்துவார் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களில் பல இடங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    Next Story
    ×