

பெங்களூரு:
பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.எம்.ஆர்.சி.எல்) விதிமுறைப்படி ரெயில் அல்லது நடைமேடைகளில் சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சுனில்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜெயநகரில் உள்ள அவர்களது பணியிடத்திற்குச் செல்வதற்காக, தினமும் சாம்பிகே சாலையில் இருந்து மெட்ரோவில் சென்று வந்தார். அப்போது மெட்ரோ ரெயிலில் சுனில்குமார் உணவு சாப்பிட்டார். இதை அவரது நண்பர்கள் வீடியோவாக படம் எடுத்தனர். பின்னர் இதை சுனில் குமார் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதைதொடர்ந்து சுனில் குமார் மீது பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது. இதையடுத்து ஜெயநகர் போலீசார் சுனில் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.