search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மிசோரம் மேம்பாலம் விபத்து- ரெயில்வே அமைச்சர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
    X

    மிசோரம் மேம்பாலம் விபத்து- ரெயில்வே அமைச்சர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

    • 17 தொழிலாளர்கள் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
    • பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    மிசோரம் மாநிலம் சைராங் பகுதி அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நேற்று காலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்புக்குழு மீட்பு பணியில் ஈடுபட்டது. 17 தொழிலாளர்கள் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

    இந்த விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்பாலம் கட்டும் பணி நடந்ததா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ரெயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " மிசோரமில் மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வருத்தமடைந்தேன். தேசிய மீட்பு குழு, மாநில நிர்வாகம் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், கடுமையான காயங்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயங்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்" என்றார்.

    Next Story
    ×