search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் நாளை புஷ்ப யாகம்
    X

    திருப்பதியில் நாளை புஷ்ப யாகம்

    • அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோத்ஸவம் ஆகிய ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
    • திருப்பதியில் நேற்று 85,131 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,188 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.

    திருப்பதி ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற பின்னர் அதில் ஏற்பட்ட குறைகளைக் களைய அடுத்து வரும் திருவோண நட்சத்திரத்தின்போது, ஏழுமலையான் கோவிலில் புஷ்ப யாக மஹோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை செவ்வாய்க்கிழமை புஷ்ப யாகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை அங்குரார்பணம் நடைபெற உள்ளது.

    புஷ்ப யாகத்தன்று கோவிலில் இரண்டாம் அர்ச்சனை, பிரசாதம் வழங்குதல் முடிந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் உற்சவர்களுடன் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு அழைக்கப்பட்டு அங்கு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு வகையான பூக்கள் மற்றும் இலைகளால் புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.

    மாலையில் சஹஸ்ர தீபாலங்கர சேவை முடிந்து ஏழுமலையான் கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதனால், அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோத்ஸவம் ஆகிய ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 85,131 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,188 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.47 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    Next Story
    ×