பாலியல் தொழில் குற்றம் அல்ல: மும்பை கோர்ட்டு பரபரப்பு கருத்து

பாதிக்கப்பட்ட பெண் வயது வந்தவர்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பாலியல் தொழில் குற்றம் அல்ல: மும்பை கோர்ட்டு பரபரப்பு கருத்து
Published on

மும்பை :

மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் முல்லுண்டு பகுதியில் சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை மஜ்காவ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 34 வயது பெண்ணை ஒரு ஆண்டு தேவ்னாரில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் ஒழுக்ககேடாக எதையும் செய்யவில்லை என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.பாட்டீல், "பெண்ணை ஒரு ஆண்டு காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவை அதிரடியாக ரத்து செய்தார்.

மேலும் உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

சம்பந்தப்பட்ட பெண் ஏற்கனவே தவறு செய்தார் என்பதற்காக, அவர் மீண்டும் அதே தவறை செய்து இருப்பார் என போலீசார் பிடித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் வயது வந்தவர். அவர் வேலை செய்ய உரிமை இருக்கிறது. சட்டப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் அல்ல. பொது இடங்களில் பாலியல் தொழில் செய்து, அதனால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் தான் குற்றம் என கூற முடியும்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் பொது இடத்தில் பாலியல் தொழில் செய்தார் என்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை. இந்த சூழலில் ஏற்கனவே நடந்ததை வைத்து பெண்ணை பிடித்து காப்பகத்தில் அடைத்து வைத்து இருப்பது சரியல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய் வேண்டும். பெண்ணை அவரது விருப்பத்துக்கு மாறாக காப்பகத்தில் அடைத்து வைப்பது, அவர் நாடு முழுவதும் சென்று வரும் உரிமைக்கு தடையாக இருக்கும். சட்டப்படியும், பெண்ணின் வயதின்படியும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பெண்ணை காப்பகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com